தமிழ்நாடு

மதுரை ஜவுளிக்கடை தீவிபத்து: கடை நிர்வாகம் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு

Sinekadhara

மதுரை ஜவுளிக்கடை தீ விபத்தில் 2 தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக கடை நிர்வாகம் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மதுரை தெற்கு மாசி வீதியில் பாபுலால் என்பவருக்கு சொந்தமான ஜவுளிக்கடையில் ஏற்பட்ட தீயை அணைக்க சென்ற சிவராஜன், கிருஷ்ணமூர்த்தி ஆகிய தீயணைப்பு வீரர்கள், கட்டட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர். மேலும் இருவர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக மதுரை பெரியார் பேருந்து நிலைய தீயணைப்பு நிலைய அலுவலர் வெங்கடேசன் கொடுத்த புகாரின் பேரில், ஜவுளிக்கடை நிர்வாகம் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஜவுளிக்கடை நடத்த முறையான அனுமதி உள்ளதா? கட்டடத்தின் உறுதி தன்மை குறித்த தடையில்லா சான்று பெறப்பட்டுள்ளதா? தீ தடுப்பு முன்னெச்சரிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பது குறித்து ஜவுளிக்கடை உரிமையாளர் மற்றும் ஊழியர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். விதிமுறை மீறல்கள் இருக்கும் பட்சத்தில் உரிமையாளர், மேலாளர் உள்ளிட்ட சிலரும் வழக்கில் சேர்க்கப்பட வாய்ப்பு உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.