தமிழ்நாடு

அதிகாரிகளை பணி செய்ய விடாமல் நாயை விட்டு ஏவியவர் கைது

அதிகாரிகளை பணி செய்ய விடாமல் நாயை விட்டு ஏவியவர் கைது

webteam

டெங்கு ஆய்வின் போது சுகாதார செயலர் மற்றும் மாவட்ட ஆட்சியரை பணி செய்யவிடாமல் தடுத்து, நாயை விட்டு ஏவி அச்சுறுத்தல் 
ஏற்படுத்தியதாக  பாலசுப்பிரமணியன் என்பவர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன் டெங்கு காய்ச்சலால் சென்னை மாதவரத்தைச் சேர்ந்த இரட்டைக் குழந்தைகள் உயிரிழந்தன. இச்சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை அடுத்து தமிழகம் முழுவதும் சுகாதாரத்துறை செயலர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள அந்தந்த மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவு பிறப்பித்தது.

திருவள்ளூர் தலைமை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருபவர்களை, தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர். ராதாகிருஷ்ணன் பார்வையிட்டு மருத்துவ சிகிச்சை குறித்து நோயாளிகளிடம் இன்று கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து ஆட்சியர் மகேஸ்வரியுடன் திருவள்ளூர் அடுத்த மணவாள நகர் காந்தி தெருவில் வீடு வீடாக சென்று ஆய்வு செய்தார்.அப்போது, அந்தப் பகுதி முழுவதும் குப்பைகள் சூழ்ந்து சுகாதார சீர்கேடு அடையும் படி இருந்துள்ளது.

இதனையடுத்து அங்கு சுகாதார செயலரும், ஆட்சியரும் ஆய்வு செய்ய முயன்ற போது, அந்த வீட்டின் உரிமையாளர் பாலகிருஷ்ணன் என்பவர் 4  நாய்களை விட்டு, அதிகாரிகளை பணி செய்ய விடாமல் அச்சுறுத்தியுள்ளார். இதே போல ஏற்கெனவே பணி செய்ய சென்ற  சுகாதார பணியாளர்களையும் பாலகிருஷ்ணன், நாய்களை விட்டு அச்சுறுத்தியதாகவும் கூறப்படுகிறது. 

இந்நிலையில் பாலகிருஷ்ணனுக்கு சொந்தமான மற்றொரு ஓட்டு வீட்டில் டெங்கு கொசுப்புழு உற்பத்தி ஆவதை அதிகாரிகள் கண்டறிந்தனர். இதனையடுத்து ₹10 ஆயிரம் அபராதமும், வருவாய் துறையினரால் அந்த வீட்டிற்கு சீல் வைக்கவும் சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டார். 

மேலும், அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்ததாக பாலகிருஷ்ணன் மீது மணவாள நகர் காவல்நிலையத்தில் கடம்பத்தூர் ஒன்றிய ஆணையர் மூலம் புகார் அளிக்கப்பட்டது. இதனை தொடந்து பாலகிருஷ்ணன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்தனர். 


இதனையடுத்து,சுகாதார பணிகளை செய்ய செல்லும் அதிகாரிகளை பணி செய்யாவிடாமல் தடுப்பவர்கள் மீதும், சுகாதார சீர்கேடு ஏற்படும் வகையில் வைத்திருப்பவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஆட்சியர் மகேஸ்வரி எச்சரித்துள்ளார். கொசுப் புழு உற்பத்தியாக காரணமான இருந்த வீட்டிற்கு சீல் வைத்து, ₹10 ஆயிரம் அபராதம் விதித்தது அப்பகுதி மக்களிடையே அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது.