தமிழ்நாடு

பைனான்சியர் அன்புச்செழியன் நண்பரிடம் ரகசிய இடத்தில் விசாரணை

பைனான்சியர் அன்புச்செழியன் நண்பரிடம் ரகசிய இடத்தில் விசாரணை

Rasus

தலைமறைவாக உள்ள சினிமா பைனான்சியர் அன்புச்செழியனின் நண்பர் முத்துக்குமாரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நடிகரும் இயக்குநருமான சசிகுமாரின் உறவினர் அசோக்குமார் கடந்த வாரம் திடீரென தற்கொலை செய்துகொண்டார். தற்கொலைக்கு காரணம் யார் என்பது குறித்து கடிதம் ஒன்றையும் அவர் எழுதி வைத்திருந்தார். அதில் பைனான்சியர் அன்புச்செழியன் துன்புறுத்தலால்தான் தற்கொலை செய்து கொள்வதாக கூறியிருந்தார். இதுதொடர்பாக சசிகுமார் அளித்த புகாரை அடுத்து அன்புச்செழியன் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆனால் போலீஸ் பிடியில் சிக்காமல் இருக்க அன்புச்செழியன் தலைமறைவாகி விட்டார். இருப்பினும் அன்புச்செழியனை பிடிக்க தனிப்படை அமைத்துள்ள போலீசார் அவர் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்வதை தடுக்க, லுக் அவுட் நோட்டீஸை அனைத்து விமான நிலையங்களுக்கும் அளித்துள்ளனர்.

இந்நிலையில் அன்புச்செழியனின் நண்பர் முத்துக்குமாரை பிடித்துள்ள போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முத்துக்குமார் சென்னை ஜாபர்கான்பேட்டையில் கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிறார். அங்கு வைத்துதான் முத்துக்குமாரை வளசரவாக்கம் போலீசார் பிடித்துள்ளனர். காவல்துறை அன்புச்செழியனை தீவிரமாக தேடிவரும் நிலையில், அன்புச்செழியனும் முத்துக்குமாரும் இணைந்து ஹைதராபாத் சென்றது தெரியவந்துள்ளது. எனவே அன்புச்செழியன் எங்கு இருக்கிறார் என்பதை கண்டுபிடிக்க, முத்துக்குமாரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஆனால் எந்த இடத்தில் வைத்து விசாரணை நடைபெறுகிறது என்பது தெரியவரவில்லை. முத்துக்குமார் அளிக்கும் தகவலை பொறுத்து, விரைவில் அன்புச்செழியனை கைது செய்துவிடுவோம் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.