தமிழ்நாடு

கார்த்திக் கோபிநாத் திருப்பணி பெயரில் ரூ.3 லட்சத்திற்கு மேல் வசூலித்துள்ளார் - காவல்துறை

Sinekadhara

யூ டியூபர் கார்த்திக் கோபிநாத் சிறுவாச்சூர் கோவில் திருப்பணி என்ற பெயரில் தனது தனிப்பட்ட வங்கி கணக்கில் ரூ.3 லட்சத்திற்கு மேல் வசூலித்துள்ளார் என சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. 

சென்னை ஆவடியை அடுத்த மிட்டனமல்லி பகுதியை சேர்ந்தவர் யூடியூபர் கார்த்திக் கோபிநாத். இவர் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயிலொன்றை, புனரமைப்பதாக கூறி பல லட்சம் வசூல் செய்ததாக இந்து அற நிலையத்துறை சார்பில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. அந்தப் புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டதில், அவர் பணம் பெற்றிருந்தது காவல்துறைக்கு தெரியவந்துள்ளது. அதன் ஆதாரங்கள் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கார்த்திக் கோபிநாத்தை கடந்த மாதம் 30ஆம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் அவரை ஜாமீனில் விடுவிக்கக்கோரி அவரது வக்கீல்கள் சார்பில் பூந்தமல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்திருந்தனர். ஜூன் 8ஆம் தேதி அந்த மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட் ஸ்டாலின், யூடியூபர் கார்த்திக் கோபிநாத்திற்கு ஜாமீன் கொடுப்பதாக உத்தரவிட்டிருந்தார். முன்னதாக கடந்த வாரம் கார்த்திக் கோபிநாத்தை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனு அளித்திருந்த காரணத்தால், அவருடைய முந்தைய ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டிருந்தது. அதைத்தொடர்ந்து அவர் இரண்டாவதாக ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார். அதில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

இதனையடுத்து கார்த்திக் கோபிநாத்தை காவல்துறை விசாரணையில் எடுக்கக்கோரி காவல்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது யூ டியூபர் கார்த்திக் கோபிநாத் சிறுவாச்சூர் கோவில் திருப்பணி என்ற பெயரில் தனது தனிப்பட்ட வங்கி கணக்கில் ரூ.3 லட்சத்தேகு மேல் வசூலித்துள்ளார் என சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல்துறை தகவல் தெரிவித்தது. 

இதற்கு கார்த்தி கோபிநாத் தரப்பில், 'கடந்த முறை ரூ.28 லட்சம் என தெரிவித்த காவல்துறை தற்போது ரூ.3 லட்சம் என குறிப்பிடுகின்றனர். உள்நோக்கத்துடன் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது' என்று தெரிவிக்கப்பட்டது. இதனை கேட்ட நீதிபதிகள், காவல்துறை விசாரணையில் எடுக்க கோரிய காவல்துறை மனுவை முடித்துவைத்தனர். மேலும் வங்கிக் கணக்கு விவரங்களை விரிவாக தாக்கல் செய்ய காவல்துறை நீதிபதி உத்தரவிட்டு, வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுவை ஜூன் 24க்கு தள்ளிவைத்தார்.