தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறவிருக்கும் சூழலில், முதன்முறையாக தேர்தலை சந்திக்கக் காத்திருக்கும் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 50 ஆண்டுகளுக்கு மேல், தமிழ்நாட்டை ஆட்சி செய்து வரும் இரு திராவிட கட்சிகளுக்கு மாற்றாக தவெக தலைவர் விஜய் தன்னை முன்னிறுத்தி களம் காணவிருக்கிறார். எனினும், அதிமுக பலமுறை தவெகவை கூட்டணிக்கு அழைத்ததாக பேச்சுகள் அடிபட்டாலும், முதலமைச்சர் வேட்பாளர் விஜய் என்பதில் தவெக உறுதியாக இருந்தால், அக்கூட்டணி அமையவில்லை எனக் கூறப்படுகிறது.
இதற்கிடையில், தமிழக அரசு தங்களுக்கு மிகப்பெரிய அளவில் நெருக்கடியைக் கொடுத்து வருகிறது. தங்கள் கூட்டங்களுக்கு காவல்துறை அனுமதி கொடுக்கவில்லை என குற்றம்சாட்டி வந்த தமிழக வெற்றிக் கழகத்தினர், தேர்தல் அறிவிப்பிற்குப் பிறகு, விஜய் பரப்புரைகளில் பங்கேற்பார் எனத் தெரிவித்து வந்தனர். இதற்கிடையில், ’ஜனநாயகன்’ தணிக்கை விவகாரம், கரூர் துயரம் தொடர்பான சிபிஐ விசாரணை போன்றவையும் விஜயின் மக்கள் சந்திப்புக்கு முட்டுக்கட்டையாக இருப்பதாக கூறப்பட்டது. இதற்கிடையில், பெரம்பூரில் விஜய் போட்டியிடவுள்ளார் எனத் தவெக தரப்பில் இருந்து தகவல்கள் வெளிவரத் தொடங்கின.
இந்த சூழலில்தான், ஏப்ரல் 23ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கும் என்ற அறிவிப்பை இம்மாதம் 15-ஆம் தேதி தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து, தொகுதிப் பங்கீட்டை நிறைவு செய்திருக்கும் கட்சிகள், 234 தொகுதிகளுக்குமான வேட்பாளர்களையும் அறிவித்து வருகின்றன. நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரையிலும் ஈடுபட ஆரம்பித்துவிட்டார்.
அதேபோல, தலைவர் விஜயும் மார்ச் 28-ஆம் தேதி பெரம்பூரில் தனது பரப்புரையைத் தொடங்குவார் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக, எம்.கே.பி நகர் பேருந்து நிறுத்தம் அருகே நாளை பரப்புரைக்கு அனுமதி கேட்டிருந்தது. இந்த சூழலில்தான், இந்த இடம் நெருக்கடியாக இருக்கிறது என்பதால், காவல்துறை அனுமதி மறுத்திருக்கிறது. மேலும், மாற்று இடத்தைத் தேர்வு செய்ய அறிவுறுத்தியுள்ளதாகவும் தவெக தரப்பை அறிவுறுத்தியிருக்கிறது. ஏற்கனவே, மார்ச் 27 நடைபெறுவதாக இருந்த தவெக வேட்பாளர்கள் அறிமுகம் தள்ளிப் போய் இருக்கும் நிலையில், விஜயின் பரப்புரை திட்டமிட்டபடி நாளை நடக்குமா எனக் கேள்வி எழுந்திருக்கிறது.
இதையடுத்து, பரப்புரைக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து தவெக தலைவர் விஜய் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் திட்டமிடப்பட்ட பரப்புரைக்குச் சென்னை மாநகரக் காவல் துறையும், அதிகாரிகள் சிலரும் இணைந்து முட்டுக்கட்டை போட்டிருப்பது, ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்டுள்ள ஒரு பாசிசத் தாக்குதலே ஆகும் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், ”நம்முடைய தேர்தல் பரப்புரை நிகழ்வுக்கு ஒருநாளுக்கு முன்பு சென்னை மாநகராட்சி சார்பில் திடீரென அந்த இடத்தில் பள்ளம் தோண்டப்பட்டு, இரும்பால் ஆன தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த திடீர்ப் பள்ளங்களும் தடுப்புகளும் எங்கிருந்து வந்தன? இந்த நிலையில் அங்கே காவல் துறை ஆய்வு செய்து 3,000 பேர் கூட முடியாது என்று கூறியுள்ளது. இதன் அடிப்படையில், தற்போது அந்த இடம் பிரசாரம் செய்வதற்கு உகந்ததல்ல என்று அனுமதி மறுக்கப்பட்டு, தமிழக வெற்றிக் கழகத்தின் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. இப்படி அதிகாரிகள் சிலரின் துணையுடன் த.வெ.க.விற்கு எதிராகச் செயல்படும் தி.மு.க. காபந்து அரசுக்கு வெட்கமாக இல்லையா?” எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.