ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பு வைத்திருப்பதாகக் கூறி கோவையில் கைது செய்யப்பட்ட மூன்று பேரையும் வரும் 28ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க மாவட்ட நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
உக்கடத்தைச் சேர்ந்த முகமது உசேன், ஷாஜகான், சேக் சபியுல்லா ஆகியோருக்கு, ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பதாகவும், அம்மூவரும் கோவையில் தீவிரவாத செயல்களை அரங்கேற்றத் திட்டமிட்டிருப்பதாகவும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து அவர்கள் மேல் வழக்குப் பதிவு செய்த அதிகாரிகள், அந்த மூவரின் வீடுகளிலும் சோதனையிட்டனர். அப்போது, மடிக்கணினி, ஹார்ட் டிஸ்க், டைரி, வங்கிக் கணக்குப் புத்தகம், சிம் கார்டு ஆகியவற்றைக் கைப்பற்றி, நேற்று முழுவதும் விசாரணை நடத்தினர். இதனையடுத்து, இன்று காலை மாவட்ட நீதிபதி சக்திவேல் வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அந்த மூன்று பேரையும் வரும் 28 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது.