தீபாவளிக்கு சொந்த ஊருக்கு செல்பவர்கள் தங்களின் வீடுகள் தொடர்பான தகவல்களை காவல்நிலையத்தில் அளித்தால் அந்த வீடு தொடந்து கண்காணிக்கப்படும் என சென்னை காவல்துறை ஆணையாளர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
சென்னை பெருநகர போக்குவரத்து காவல் மற்றும் ICAT Design & Media College சார்பில் காவலர் வீர வணக்க விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு மெரினா, காந்தி சிலை அருகே உருவாக்கப்பட்டுள்ள மணற்சிற்பத்தை திறந்து வைத்து, பெருநகர சென்னை காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் பார்வையிட்டார்.
அதனைத் தொடர்ந்து மாணவர்களை வைத்து கொரானா குறித்த விழிப்புணர்வு நாடகம் ஒன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் போக்குவரத்து கூடுதல் ஆணையர் பிரதீப் குமார், நிர்வாக பிரிவு கூடுதல் ஆணையர் லோகநாதன், இணை ஆணையர்கள் லலிதா குமாரி, செந்தில் குமாரி, போக்குவரத்து துணை ஆணையர் ஓம் பிரகாஷ் ஆகியோரும் பங்கேற்றனர.
அதன்பிறகு பேசிய காவல்துறை ஆணையாளர், "21ஆம் தேதி தொடங்கிய இந்த வீர வணக்கம் நாள் நாளையுடன் முடிவடைகிறது. மாநகர காவல் துறையில் பணியாற்றி உயிர் தியாகம் செய்தவர்களின் குடும்பங்களின் குறைகளுக்கு தீர்வு காணப்பட்டு வருகிறது. கொரானா தொற்றால் மரணமடைந்த காவலர்களுக்கு நிவாரண தொகை வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்களுக்கும் விரைவில் வழங்கப்படும்.
தீபாவளி: ‘உத்தரவை மீறினால் நடவடிக்கை’ - தமிழக அரசு எச்சரிக்கை
மேலும், பட்டாசுகள் வெடிக்க நேர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு விதிகளை மீறியதற்காக 383 வழக்குகள் போடப்பட்டது. இந்த ஆண்டு 18 ஆயிரம் போலீசார் தீபாவளி அன்று பாதுகாப்பு பணியில் இருப்பார்கள். தீபாவளி அன்று சொந்த ஊருக்கு செல்லும் மக்களிடம் தனியார் பேருந்துகள் அதிக கட்டணம் வசூலித்தால், புகார்கள் வரும் பட்சத்தில் நிச்சயம் நடவடிக்கை எடுப்போம். தீபாவளிக்கு சொந்த ஊருக்கு செல்பவர்கள் தங்களின் வீடுகள் தொடர்பான தகவல்களை காவல் நிலையத்தில் அளித்தால் அந்த வீடு தொடந்து கண்காணிக்கப்படும்” என அவர் தெரிவித்தார்.