பல நாட்களாக தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி பினுவை போலீசார் கைது செய்தனர். மாங்காடு காவல்நிலையத்தின் கையெழுத்திட வேண்டுமென்ற நிபந்தனையுடன் பினுவுக்கு ஜாமின் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் பினு ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். இந்நிலையில் தலைமறைவானதாக போலீசார் உறுதி செய்தனர். தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. அதன் இறுதியில் இன்று கும்மிடிப்பூண்டி அருகே பினுவை போலீசார் கைது செய்தனர்.
கடந்த பிப்ரவரி 7-ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்டம் மலையம்பாக்கத்தில் ரவுடி பினு கூட்டாளிகளுடன் பிறந்தநாள் கொண்டாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
பின்னணி
பிறந்தநாள் கொண்டாடிய பிரபல ரவுடி பினு தலைமறைவாகியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நிபந்தனை ஜாமீனில் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட அவர் காவல்நிலையத்தில் ஆஜராகவில்லை என்பது தெரியவந்துள்ளது.கடந்த பிப்ரவரி 7-ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்டம் மலையம்பாக்கத்தில் ரவுடி பினு கூட்டாளிகளுடன் பிறந்தநாள் கொண்டாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தனிப்படையினர் அவரை தேடி வந்தபோது பிப்ரவரி 13-ஆம் தேதி ரவுடி பினு காவல்துறையினரிடம் சரணடைந்தார். அவர் மீது வழக்கு பதிந்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
சுமார் 3 மாதங்களாக வேலூர் சிறையில் இருந்த பினுவுக்கு கடந்த 23-ஆம் தேதி நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டதை அடுத்து அவர் விடுவிக்கப்பட்டார். சென்னை மாங்காடு காவல்நிலையத்தில் ஆஜராகி தினமும் கையெழுத்திட வேண்டுமென பினுவுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால், கடந்த 1 வாரமாக அவர் காவல்நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திடவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக நீதிமன்றத்தை நாடி பினுவின் ஜாமீன் மனுவை ரத்து செய்ய காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.