தமிழ்நாடு

பெண்ணை வன்கொடுமை செய்ததாக வலம் வந்த வீடியோ - நடந்தது என்ன ?

webteam

சேலத்தில் ஒருவரை தன்பாலின உறவுக்கு அழைத்ததாக கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சேலத்தில் பெண்ணை ஒருவர் அடித்து உதைத்து பாலியல் வன்கொடுமை செய்யும் வீடியோ என்ற பெயரில் இந்த காட்சிகள் பரப்பப்பட்டன. இதுகுறித்து காவல்துறையினரிடம் விசாரித்த போது, வீடியோவின் பின்னணி வெளிவந்துள்ளது. இந்த வீடியோவில் இருப்பவர் சேலம் மகுடஞ்சாவடியைச் சேர்ந்த மோகன்ராஜ். சொந்தமாக இரண்டு ஆட்டோக்கள் வைத்துள்ள மோகன்ராஜ் ஒன்றை வாடகைக்கு விட்டுவிட்டு மற்றொன்றை தானே ஓட்டி வந்துள்ளார். 

இவருக்கும் வீடியோவில் இருக்கும் பெண்ணுக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்ததாக தெரிகிறது. அதைப்பயன்படுத்தி அந்தப்பெண் மோகன்ராஜிடம் அடிக்கடி பணம் வாங்கி வந்ததாகவும், அண்மையில் 30 ஆயிரம் ரூபாய் கேட்டதாகவும் சொல்லப்படுகிறது. தற்போது அவ்வளவு பணம் தன்னிடம் இல்லை என மோகன்ராஜ் கூறியதை ஏற்க மறுத்த அந்தப்பெண், பணம் தராவிட்டால் இருவரும் சேர்ந்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு விடப்போவதாக மிரட்டியதாக கூறப்படுகிறது. 

இதனால்‌ இருவரும் ஒன்றாக இருப்பது போல் வீடியோ எடுத்து பதிலுக்கு அந்தப்பெண்ணை மோகன்ராஜ் மிரட்டியதாக காவல்துறையினர் சொல்கின்றனர். அந்தக் காட்சிகள்தான் அவர் பெண்ணை வன்கொடுமை செய்யும் வீடியோ என்ற பெயரில் வெளிவந்துள்ளதாக கூறுகின்றனர். மோகன்ராஜ் தன்னை மிரட்டியதால் ஆத்திரமடைந்த அந்தப்பெண் தனது கணவர் மூலம் அவர் மீது காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். அந்தப்பெண்ணின் கணவரை தன்பாலின உறவுக்கு அழைத்ததாக மோகன்ராஜ் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன்பேரில் மோகன்ராஜ் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.