தமிழ்நாடு

‘நடுரோட்டில் கட்டிப்புரண்டு சண்டை’ : போக்குவரத்து ஆய்வாளரை கடித்த டிரைவர்

webteam

ராமநாதபுரத்தில் போக்குவரத்து காவல் ஆய்வாளரும், தனியார் வாகன ஓட்டுனரும் சாலையில் கட்டிப்புரண்டு சண்டையிடும் வீடியோ காட்சி வாட்ஸ்அப்பில் பரவி வருகிறது.

ராமநாதபுரம் பஜார் பகுதியில், போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் விஜயகாந்த், மற்றும் சக காவலர்கள் ஈடுபட்டுள்ளனர். அப்போது, காவலர்கள் கைக்காட்டியும் நிற்காமல், டாடா ஏசி வாகனம் ஒன்று நிற்காமல் சென்றுள்ளது. அவ்வாகனத்தை விரட்டிப்பிடித்த காவல் ஆய்வாளர் விஜயகாந்த், நிற்காமல் சென்ற வாகனத்தின் ஓட்டுநர் கர்ணன் என்பவரை கன்னத்தில் அறைந்ததாக கூறப்படுகிறது. 

இதனால் இருவருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதாகவும் தெரிகிறது. இதையடுத்து இருவரும் சாலையிலேயே கட்டிப்புரண்டு சண்டையிட்டுள்ளனர். அப்போது, காவல் ஆய்வாளர் விஜயகாந்தின் கழுத்தில், கர்ணன் பலமாக கடித்துள்ளார். வாகன ஓட்டுநர் கர்ணனை மடக்கிப்பிடித்த சக காவலர்கள், மூன்று பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கழுத்தில் காயமடைந்த ஆய்வாளர் விஜயகாந்த், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.