தமிழ்நாடு

திண்டுக்கல்: காவல் சிறப்பு சார்பு ஆய்வாளர் மற்றும் அவரது நண்பருக்கு அரிவாள் வெட்டு

கலிலுல்லா

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் காவல்துறை சிறப்பு சார்பு ஆய்வாளர் மற்றும் அவரது நண்பரை அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடிய நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

பழனி அடிவாரம் காவல்நிலையத்தில் சிறப்பு சார்பு ஆய்வாளராக பணிபுரிந்து வரும் சந்தானகிருஷ்ணன் நேற்றிரவு தனது நண்பர் ஆனந்தன் என்பவருடன் பேசிக்கொண்டிருந்தபோது அங்கு வந்த சிலர் ஆனந்தனை அரிவாளால் வெட்ட முயன்றதாக தெரிகிறது. அவர்களை சந்தானகிருஷ்ணன் தடுக்கமுயன்றதால் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

தாக்குதல் நடத்திய நபர்கள் ஆனந்தனையும் வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இருவரையும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருவரும் பேச முடியாத நிலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் தாக்குதலின் பின்னணி குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.