தமிழ்நாடு

காதலர்களை பிரிக்க நினைத்த பெண்ணின் பெற்றோர்! - சுமூகமாக முடித்து வைத்த காவலர்கள்!

காதலர்களை பிரிக்க நினைத்த பெண்ணின் பெற்றோர்! - சுமூகமாக முடித்து வைத்த காவலர்கள்!

webteam

திருச்சியில் காதலர்களை பிரிக்க நினைத்த பெற்றோருக்கு அறிவுரை கூறி போலீசார் சுமூகமாக அனுப்பி வைத்தனர்.

திருச்சி சுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவர் சிதம்பரநாதன் (24), தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் இசக்கி அம்மாள் (23). இவர்கள் இருவரும் காரைக்குடியில் உள்ள தனியார் கல்லூரியில் படிக்கும் போது காதலித்து வந்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து இசக்கி அம்மாளுக்கு வேறு நபருடன் திருமணம் செய்ய பெற்றோர் முடிவு எடுத்ததால் அவர் வீட்டை விட்டு வெளியேறி சிதம்பரநாதனை திருமணம் செய்துகொண்டார்.

தொடர்ந்து பெற்றோர் தங்களை பிரித்து விடுவார்கள் என்ற அச்சத்தில் திருச்சி கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் சரணடைய இருவரும் வந்துள்ளனர். அவர்களை தடுத்து நிறுத்திய பெண்ணின் பெற்றோர் காவல் நிலைய வாசலில் வைத்து இருவரையும் காரில் ஏற்ற முயற்சி செய்தனர். அப்போது அந்த வழியாக சென்ற காவல்துறை துணை ஆணையர் (டிசி) வேதரத்தினம் இதுகுறித்து விசாரணை செய்தார்.

தாங்கள் காதல் திருமணம் செய்து கொண்டதாகவும், பெற்றோர் தங்களை பிரிக்க நினைப்பதாகவும் மணமக்கள் தெரிவித்தனர். இருவரையும் வலுக்கட்டாயமாக காரில் ஏற்ற முயன்றதால் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்தனர்.

உடனே பெண்ணின் பெற்றோர் சமாதானமாக செல்வதாகவும், தன் மகளையும் மகளின் கணவரையும் ஏற்றுக்கொள்வதாகவும் தெரிவித்தனர். புகார் எதுவும் பதிவு செய்யாமல், இரு குடும்பத்தினரையும் சமாதானப்படுத்தி காவல்துறையினர் அனுப்பி வைத்தனர்.