கவிஞர் வைரமுத்து 60-வது ஞானபீட விருதைப் பெற்றதன் மூலம் தமிழ் இலக்கியம் மீண்டும் கவனம் பெற்றுள்ளது. 24 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழர் ஒருவர் இந்த உயரிய விருதைப் பெறுவது பெருமையாகும்.
இலக்கியத் துறையில் சாதனை படைத்தோருக்கு ஆண்டுதோறும் ஞானபீட விருது வழங்கப்பட்டு வருகிறது. நாட்டின் மிக உயர்ந்த இலக்கிய விருதாக ஞானபீடம் விருது கருதப்படுகிறது. கடந்த 1961-இல் நிறுவப்பட்ட ஞானபீட விருது, முதன்முதலில் மலையாளக் கவிஞர் ஜி. சங்கர குருப்பிற்கு 1965-இல் 'ஓடக்குழல்' என்ற கவிதைத் தொகுப்பிற்காக வழங்கப்பட்டது.
அந்த வகையில், 60-வது ஞானபீட விருதுக்கு தமிழ்க் கவிஞர் வைரமுத்து தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம், 24 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த விருதைப் பெறும் தமிழர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். முன்னதாக, 1975-ல் எழுத்தாளர் அகிலனுக்கும், 2002-ம் ஆண்டு எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கும் வழங்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து, கடந்த சில ஆண்டுகளாக, ஞான பீட விருதுக்கு தமிழ் மொழி புறக்கணிக்கப்படுவதாகவும், செம்மொழியான தமிழுக்கு இதுவரை 2 ஞானபீட விருதுகள் மட்டுமே கிடைத்து வருவதாகவும் ஆதங்கம் தெரிவிக்கப்பட்டது. இந்த சூழலில் தான், கவிஞர் வைரமுத்துவுக்கு 60-வது ஞானபீட விருது வழங்கப்பட்டிருக்கிறது.
கவிஞர் வைரமுத்து, 7 தேசிய விருதுகள், பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன் உட்பட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். கவிதை, நாவல், கட்டுரை என தமிழ் மொழிக்கு பங்காற்றிய கவிஞர் வைரமுத்து 10 நாவல்கள், 12 கவிதைத் தொகுப்புகளுக்கு என பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
இந்த விருது கிடைத்தது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள கவிஞர் வைரமுத்து, தமிழ் மண்ணுக்கும் மக்களுக்கு இந்த விருதை காணிக்கையாக்குகிறேன். இனி எனது பயணம் புதுப்பாய்ச்சலுடன் இருக்கும் எனத் தெரிவித்திருக்கிறார்.