சேலம் முகநூல்
தமிழ்நாடு

7 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பிளஸ் 1 படிக்கும் மாணவர்கள்!

சேலம் மாவட்டத்தில் இயங்கி வருகிறது இருபாலருக்கான அரசுப்பள்ளி ஒன்று.

ஜெனிட்டா ரோஸ்லின்

செய்தியாளர்: ஆர்.ரவி

தமிழகத்தில், பள்ளி மாணவிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. கிருஷ்ணகிரியில் எட்டாம் வகுப்பு மாணவி மூன்று ஆசிரியர்களால் பாலியல் துன்புறத்தலுக்கு ஆளாக்கப்பட்டதாக வெளியான செய்தி ஏற்படுத்திய அதிர்வுகள் அடங்குவதற்குள் மணப்பாறையில் தனியார் பள்ளி மாணவியிடம், அப்பள்ளியின் அறங்காவலர் வகுப்பறையிலேயே பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக வெளியான செய்திகள் பதைபதைக்க வைக்கின்றன.

இந்தநிலையில்தான், சேலத்தில் அரங்கேறியுள்ளது மற்றொரு அதிர்ச்சிகர சம்பவம்.

சேலம் மாவட்டத்தில் இயங்கி வருகிறது இருபாலருக்கான அரசுப்பள்ளி ஒன்று. இங்கு கடந்த ஜனவரி 22 ஆம் தேதி மாலை, 7 ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு 11 ஆம் வகுப்பு பயிலும் மூன்று மாணவர்கள் பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர்.. இந்த சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட மாணவி தனது பெற்றோரிடத்தில் தெரிவிக்க, மாணவியின் பெற்றோர் குழந்தைகள் உதவி எண்ணான 1098 ல் புகார் அளித்துள்ளனர்.

இந்நிலையில், ஆத்தூர் அனைத்து மகளிர் காவல்துறையினர் சம்பந்தப்பட்ட மாணவர்கள் மூன்று பேர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

என்று தீரும் இந்த அவலம்.

புதுச்சேரி 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம், கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கு , மகளிர் ரயில் பெட்டியில் சென்ற 4 மாத கர்ப்பிணிக்கு பாலியல் துன்புறத்தல் என பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது.

NCRB எனப்படும் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் : 2020 ஆம் ஆண்டு அறிக்கையின்படி, குழந்தைகளுக்கு எதிராக 1,28 ,531 வழக்குகள் பதிவாகி உள்ளன. இந்தியாவில் மொத்தமுள்ள குழந்தைகளில் 28.9% பேர் ஏதாவது வகையில் பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுவதாகவும், இந்த குற்றங்களில் 65% மட்டுமே பதிவாகியுள்ளதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன.

NCRB : 2021 ஆம் ஆண்டுக்கான அறிக்கையின்படி, குழந்தைகளுக்கு எதிராக மொத்தம் 1,49, 404 வழக்குகள் பதிவாகி உள்ளன. இது 2020-ம் ஆண்டை விட 16.2 சதவீதம் அதிகரித்துள்ளது.

2022 ஆம் ஆண்டில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக மொத்தம் 1,62,449 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த தரவுகளை கடந்த 2021 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 8.7% (1,49,404 வழக்குகள்) அதிகரித்துள்ளது என்பதை ஆதாரமிட்டு காட்டுகின்றன.

இந்த வழக்குகளில் பெரும்பாலானவை கடத்தல் மற்றும் கடத்தல் தொடர்பானவை (45.7%) . மேலும், Protection of Children from Sexual Offences Act இன் கீழ் (39.7%) வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இப்படி அதிகரிக்கும் குற்றங்கள் தொடர்பாக மக்கள் எழுப்பும் ஒரே ஒரு கேள்வி .. ’ அரசும் அதன் சட்ட ஒழுங்கும் என்ன செய்து செய்துகொண்டிருக்கிறது? ’ என்பதுதான்.