தமிழ்நாடு

மாமல்லபுர கற்சிற்பங்களில் சீன பயணி யுவான் சுவாங் - காப்பாளர் தகவல் 

webteam

சீன அதிபர் ஸி ஜின்பின்னுக்கும், இந்திய பிரதமர் மோடிக்கும் இடையேயான சந்திப்பால் மாமல்லபுரம் பக்கம் உலகத்தின் பார்வை திரும்பியுள்ளது. இச்சமயத்தில் தமிழ்நாட்டிற்கும், சீனாவுக்குமான உறவை குறித்து அறிவோம்.  

சீனர்களுக்கும், தமிழர்களுக்கும் இடையே கி.மு.2 ஆம் நூற்றாண்டில் இருந்தே நல்லுறவு நிலவியதற்கான சான்றுகள் மாமல்லபுரத்தில் விரவிக்கிடக்கின்றன. பல்லவர்கள் காலத்தில் ‌இருந்தே சீனர்கள் உடனான வணிகத் தொடர்புகள் செழிப்பாக இருந்தன. இரண்டாம் நூற்றாண்டில் இருந்தே இருதரப்பு வணிகத்திற்கு மாமல்லபுரம் துறைமுகம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக ‌இருந்திருக்கிறது. சுனாமிக்கு பிறகு மகாபலிபுரம் அருகே சாளுவன்குப்பம் என்கின்ற பகுதியில் துறைமுகத்திற்கு உண்டான கட்டுமானங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. 

 
“வாசனைப் பொருட்களை தந்ததும் பட்டு நெசவை சீனர்களிடம் கற்றதும் இன்றளவும் இருதரப்புக்கான நல்லுறவின் உதாரணங்களாக இருக்கின்றன. பல்லவர் காலத்தில் சிறந்து விளங்கிய இயற்கை மருத்துவ முறைகள், சிகிச்சை முறைகளையும், தமிழகத்தில் இருந்து பெற்றுள்ளது சீனம். 

அதேபோல, புத்த மதத்தின் மகாயானம், ஹீனயானம் என்ற இருபிரிவுகளுடன் தற்காப்பு கற்றுத்தரும் வஜ்ராயனத்தையும் சீனா பெற்றிருக்கிறது. சீனர்கள் தென்னிந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்வதற்கு மிகவும் எளிய வழியாக காஞ்சி மாவட்டத்தை பயன்படுத்தியிருக்கிற‌ர்கள். சீன அறிஞர் பான் கு எழுதிய ஹான் வம்சத்தின் புத்தகம் என்ற நூலில், குவாங்சி என்று ஒரு நகரத்தை பற்றி குறிப்பிட்டுள்ளார். காஞ்சி நகரையே அவர் அவ்வாறு குறிப்பிட்டுள்ளதாக கூறுகிறார்கள்” என்கிறார் காஞ்சிபுரம் அருங்காட்சியக காப்பாளர் உமாசங்கர். 

மேலும், “இரண்டாம் நூற்றாண்டில் தொடங்கி ஏழு மற்றும் எட்டாம் நூற்றாண்டு வரை வணிகம் தொடர்ந்து உள்ளது. அதன் பிறகு பல்லவர்கள் ஆட்சி காலத்தில் தரைவழியாக யுவான் சுவாங் மாமல்லபுரம் வந்த பிறகு அவர் தனது நூல் குறிப்பில் இதை குறிப்பிட்டு இருக்கிறார். மாமல்லபுரத்தின் கற்சிற்பங்களில் யுவான் சுவாங்கும் இடம் பெற்றிருப்பது இன்றளவும் மாமல்லைக்கும், சீனத்துக்குமான தொடர்பை கூறிக்கொண்டிருக்கிறது” என்கிறார்.