பிரதமர்
பிரதமர் முகநூல்
தமிழ்நாடு

“கடந்த ஆட்சிக்காலத்தை விட மூன்று மடங்கு தொகையை தமிழ்நாட்டுக்கு தந்துள்ளது மத்திய அரசு” - பிரதமர்

PT WEB

மத்திய அரசு தமிழகத்துக்கு போதிய நிதிப்பகிர்வைத் தரவில்லை என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டிய நிலையில், “கடந்த ஆட்சிக்காலத்தை விட மூன்று மடங்கு தொகையை தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு தந்துள்ளது” என திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார் கூறியுள்ளார்.

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் 'என் மண் என் மக்கள்’ நடைபயண நிறைவு விழா பொதுக் கூட்டம் பல்லடம் அருகே மாதப்பூர் என்ற இடத்தில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க திரண்டிருந்த மக்கள் மத்தியில் பிரதமர் மோடி திறந்த வாகனத்தில் வந்தார். அப்போது மலர்களைத் தூவி அவரை மக்கள் வரவேற்றனர்.

விழா மேடையில், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாரதிய ஜனதா மாநிலத் தலைவர் அண்ணாமலை, இந்திய ஜனநாயகக் கட்சித்தலைவர் பாரிவேந்தர், தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி. சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழ்ப் பண்பாட்டை உலகம் முழுவதும் எடுத்துச்சென்றவர் பிரதமர் மோடி என்றார். மேலும் தமிழகத்தில் 39 தொகுதிகளை பாஜக கூட்டணி வெல்லும் என்றும், தமிழகத்தல் ஒரு அரசியல் சரித்திரம் நடந்து கொண்டிருப்பதாகவும் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

இந்நிலையில், விழாவில் பேசிய பிரதமர் நரேந்திரமோடி,

“தமிழ்நாட்டு மக்கள் என்மேல் அன்பு கொண்டவர்கள். தமிழக வளர்ச்சிக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. கடந்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்காலத்தில் தமிழகத்துக்கு எந்த திட்டங்களும் நிறைவேற்றப்படவில்லை.

2004 முதல் 2014 வரை மத்தியில் ஆண்ட காங்கிரஸ் கூட்டணி அரசில் திமுகவும் அங்கம் வகித்தபோது அவர்கள் தந்ததைக் காட்டிலும் கூடுதலாக 3 மடங்குத் தொகையை தமிழகத்துக்கு மத்திய அரசு தந்திருக்கிறது. தமிழகத்தின் வளர்ச்சிக்கு பல தொழில்துறையில் கொங்கு மண் முக்கிய பங்காற்றிவருகிறது.

ஆகவே உலகிலேயே வேகமாக வளரும் பொருளாதார நாடாக இந்தியா விளங்கும். தமிழகத்தில் உள்ள கொள்ளை கும்பலுக்கு முடிவுகட்டும் விதமாக 2024 தேர்தல் அமையும். மத்திய அரசின் திட்டத்தால் தமிழகத்தில் ஒவ்வொரு இளைஞரும் முன்னேற்றம் அடைந்து வருகிறார்கள்” என்றார்.