தமிழ்நாடு

“மதுரை எய்ம்ஸால் கன்னியாகுமரி மக்களும் பயனடைவார்கள்” - பிரதமர் மோடி

“மதுரை எய்ம்ஸால் கன்னியாகுமரி மக்களும் பயனடைவார்கள்” - பிரதமர் மோடி

webteam

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையால் கன்னியாகுமரியில் உள்ள மக்களும் பயனடைவார்கள் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி மதுரைக்கு வந்து எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல்லை நாட்டினார். பின்னர் பேசிய அவர், “வணக்கம். மீனாட்சி அம்மன் கோயிலுக்கு பெயர் பெற்ற மதுரைக்கு வந்ததில் மகிழ்ச்சி. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை சுகாதாரத்துறையில் சிறந்து விளங்குகிறது. நாட்டின் நான்கு திசைகளிலும் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ளது. மதுரை, தஞ்சை, நெல்லையில், உயர்சிகிச்சை மையங்களை திறந்து வைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். மதுரையில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை மூலம் கன்னியாகுமரியைச் சேர்ந்தவர்களும் பயனடைவர். கடந்த நான்கரை ஆண்டுகளில் மருத்துவப் படிப்பு இடங்கள் 30% அதிகரித்துள்ளன. 

பிரதமரின் திட்டத்தின் இலவச சிகிச்சை மக்களுக்கு வழங்கப்படுகிறது. தேவைப்படும் மக்களுக்கு ஆண்டுதோறும் ரூ.5 லட்சம் காப்பீடு வழங்கப்படுகின்றது. தமிழகத்தில் ஒன்றரை கோடி மக்கள் ரூ.5 லட்சம் மதிப்பிலான மருத்துவக் காப்பீடு பெற்றுள்ளனர். 1,320 சுகாதார நிலையங்கள் தமிழகத்தில் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன. அனைவருக்கும் மருத்துவ வசதி கிடைக்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசு திட்டங்களை கொண்டுவந்துள்ளது.

மத்திய அரசின் மருத்துவக் காப்பீடு திட்டம் தொடங்கிய ஒரு மாதத்தில் ரூ.200 கோடி மதிப்பில் மருத்துவ சேவை அளிக்கப்பட்டுள்ளது. மருத்துவக் காப்பீடு திட்டத்தின் கீழ் தமிழகத்தில் ஒரு மாதத்தில் 89,000 பேர் சிகிச்சை பெற விண்ணப்பித்துள்ளனர்” என தெரிவித்தார். முன்னதாக, மதுரை வந்த பிரதமரை முதலமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் விமான நிலையத்தில் வரவேற்றனர்.