PM Modi
PM Modi புதிய தலைமுறை
தமிழ்நாடு

’இனிமேல் உங்களிடம் நான் தமிழ் மொழியில் பேசப் போகிறேன்’ - பிரதமர் மோடி

ஜெனிட்டா ரோஸ்லின்

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 4 முறை தமிழ்நாட்டுக்கு வந்து சென்றுள்ள பிரதமர் மோடி, மீண்டும் இன்று வருகை தந்துள்ளார்.

அதன்படி, 5-ஆவது முறையாக தமிழ்நாட்டின் தென்மாவட்டமான கன்னியாகுமரிக்கு வருகை தந்துள்ளார். காலை 10 மணியளவில் திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு வருகை தந்த அவர், ராணுவ ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகையில் உள்ள ஹெலிகாப்டர் தளத்திற்கு சென்றார்.

pm modi

அங்கிருந்து சாலை மார்க்கமாக 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள விவேகானந்தர் கலைக் கல்லூரிக்கு சென்ற அவர், அங்கு 70 ஆயிரம் பேர் பங்கேற்கும் பாஜக பொதுக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார்.

அங்கு அவர் பேசுகையில், “ சனாதானத்திற்கு எதிராக பேசியவர்களுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருக்கிறது. வ.உ.சி துறைமுகம் தற்போது மீனவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. தமிழக மக்களின் உயிரோடு திமுக - காங்கிரஸ் விளையாடுகிறது.

மத்தியில் உள்ள பாஜகவை பொறுத்தவரை எப்பொழுதும் பெண்களை முன்னேற்றும் அரசு,பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் அரசு . ஆனால், திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு பெண்களை ஏமாற்றத்தான் தெரியும். அவமானப்படுத்தத்தான் தெரியும்.

ஆனால், பாஜகவோபெண்களை மதிக்கின்ற கட்சி. இந்த மேடையிலேயே உங்களுக்கு தெரிந்திருக்கும் எத்தனை மகளிர் தலைவர்கள் இங்கு வீற்றிருக்கிறார்கள் என்று. பெண்களுக்கு மிகப்பெரிய மரியாதை கொடுக்க, பாஜக அரசு இன்னும் மென்மேலும் பாடுபடும்.

நீங்கள் அனைவரும் எனக்கு இங்கு கொடுக்கும் அன்பை என்னால் உணர முடிகிறது. நான் அடிக்கடி தமிழகம் வருகிறேன். ஆனால், என்னால் தமிழ் மொழியை தெளிவாக பேச முடியவில்லை. தமிழ் மொழியை கற்றுக் கொள்ள முடியவில்லையே என்று மிகவும் வருந்துகிறேன்.

இக்குறைப்பாட்டை சரி செய்ய தொழில்நுட்பத்தின் துணையை நான் நாடியுள்ளேன். இனிமேல், உங்களிடம் நான் தமிழ் மொழியில் பேசப் போகிறேன். இதன்படி, சமூக ஊடங்கமான x வலைதளப்பக்கத்தில், நமோ செயலில் இனி தமிழிலும் வரவுள்ளது. அதில் உங்களிடம் என் குரலிலேயே, எந்த உணர்ச்சியில் நான் பேசுகிறேனோ அதே உணர்ச்சியில் தமிழிலேயே நான் பேசுவேன். என் இந்த முயற்சி உங்கள் அன்பால் வெற்றி அடையும் என்று நம்புகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.