நியூட்ரினோ ஆய்வுத் திட்டத்தை தமிழகத்தில் அமைப்பதில் உள்ள தடைகளை நீக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அமைச்சரவை செயலாளர் சின்காவுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதை அடுத்து, இத்தகைய நடவடிக்கை அதிகார மீறல் என்று பூவுலகின் நண்பர்கள் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “நியூட்ரினோ திட்டத்தை தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி பெற்ற பின்பே நடைமுறைப்படுத்த வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பதிவு செய்த பொது நல வழக்கில் மதுரை உயர்நீதிமன்ற கிளை கூறியுள்ளது. இதுநாள் வரை தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நியூட்ரினோ திட்டத்திற்கு அனுமதி வழங்கவில்லை. மேலும் பூவுலகின் நண்பர்கள் தாக்கல் செய்த வழக்கில் பசுமை தீர்ப்பாயம் நியூட்ரினோ திட்டத்திற்கு கொடுக்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதியை நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது. புதிய அனுமதி வாங்கவும் கூறியிருந்தது. அதன்படி நியூட்ரினோ திட்டத்திற்கான புதிய அனுமதி பெற பதிவு செய்யப்பட்ட மனுவும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் முன்பாக நிலுவையில் உள்ளது” என்று கூறியுள்ளது.
மேலும், இதே வழக்கில் தமிழக அரசு தனது நிலைப்பாட்டை, “தண்ணீர் மற்றும் காற்றில் ஏற்படும் மாசு குறித்த ஆய்வு மேற்கொள்ள மட்டுமே தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் நிபுணர்கள் உள்ளனர். நியூட்ரினோவிற்கு பல்வேறு துறை வல்லுனர்களின் கருத்து பெறப்பட வேண்டியிருப்பதால் அத்துறை சார்ந்த நிபுணர்கள் அடங்கிய குழுவை அமைத்து அக்குழு அளிக்கும் முடிவின் அடிப்படையிலேயே இத்திட்டத்திற்கான அனுமதி வழங்க முடியும்” எனக் கூறியிருந்தது.
இந்த நிலையில் பிரதமரின் இந்த நடவடிக்கை தமிழ்நாட்டின் மீது நியூட்ரினோ ஆய்வகத்தை சட்டத்திற்கு புறம்பாக வலிந்து திணிப்பதாக அமைவது கண்டனத்திற்குரியது. அரசு அமைப்புகளை சுதந்திரமாக செயல்படுவதை தடுக்கும் விதமாக இச்செயல் உள்ளது.
நியூட்ரினோ திட்டம் அமைய உள்ள இடம் மேற்கு தொடர்ச்சி மலை என்பதாலும், இத்திட்டத்திற்க்கு தேவையான கட்டுமானத்திற்கு பல ஆயிரம் கிலோ வெடி மருந்துகள் பயன்டுத்தி சுரங்கம் அமைக்க வேண்டியுள்ளதாலும் சூழலியல் கடுமையாக பாதிக்கப்படும் ஆபத்து உள்ளது. மேலும் இந்திய நியூட்ரினோ ஆய்வுத் திட்டம் என்பது செயற்கை நியூட்ரினோ கதிர்களையும் ஆய்வு செய்யும் வகையிலேயே திட்டமிடப்பட்டுள்ளது. இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இத்திட்டம் செயல்படுத்தபடுகிறது. இது ராணுவ தேவைக்கான ஆய்வாக அமையக்கூடும் என்றும் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு கருத்து தெரிவித்துள்ளது.