PM Modi in Rameshwaram PT
தமிழ்நாடு

”தமிழ்நாட்டிற்கு எல்லாம் செய்த பிறகும் சிலர் அழுது கொண்டே இருக்காங்க” - பிரதமர் மோடியின் முழு உரை!

தமிழகத்திற்கு தங்கள் அரசு 3 மடங்கு அதிக நிதியை ஒதுக்கியுள்ளதாகவும் ஆனாலும் சிலர் அழுவதாகவும் பிரதமர் பேசியுள்ளார்.

PT WEB

இலங்கையில் 3 நாள் பயணத்தை முடித்துக்கொண்டு அனுராதபுரத்தில் இருந்து எம்ஐ-17 ரக ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மோடி ராமேஸ்வரத்தின் மண்டபம் பகுதியை வந்தடைந்தார். அப்போது அவர் பாரம்பரிய உடையான பட்டு வேட்டி, சட்டை அணிந்திருந்தார்.

பிரதமர் மோடியை, ஆளுநர் ஆர்.என்.ரவி, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, ராமநாதபுரம் எம்.பி., நவாஸ் கனி, மாநிலங்களவை உறுப்பினர் ஜி.கே.வாசன், சட்டமன்ற உறுப்பினர்கள் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ஹெச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை செளந்தரராஜன், சரத்குமார் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

அப்போது கம்ப ராமாயணத்தின் 9 தொகுப்புகளையும் பிரதமர் மோடிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பரிசாக வழங்கினார். அமைச்சர் தங்கம் தென்னரசு திருவள்ளுவர் சிலையை பிரதமருக்கு பரிசளித்தார். பின்னர் அங்கு அமைக்கப்படிருந்த தற்காலிக தங்குமிடத்தில் இளைப்பாறிய பிரதமர் மோடி, சாலை மார்க்கமாக பாம்பன் பாலத்திற்கு சென்றார். காரில் இருந்தபடியே பிரதமர் மோடி மக்களை பார்த்து கையசைத்தபடி சென்றார்.

பாம்பன் பால சாலையில் அமைக்கப்பட்டிருந்த விழா மேடைக்கு வந்த பிரதமர் மோடி, ராமேஸ்வரம் - பாம்பன் மண்டபத்தை இணைக்கும் புதிய பாம்பன் பாலத்தை ரிமோட் மூலம் திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். அதனை தொடர்ந்து பாம்பனில் இருந்து ராமேஸ்வரத்துக்கு ரயில்வே பணியாளர்கள், பள்ளி மாணவர்களை ஏற்றிக்கொண்டு ரயில் புறப்பட்டது.

ராமேஸ்வரத்தில் புதிய பாம்பன் பாலம் திறப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிரதமர் மோடி பின்னர் பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது தமிழகத்தின் வளர்ச்சிக்கு தங்கள் அரசு முன்னுரிமை அளித்து வருவதாக குறிப்பிட்டார். கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்திற்கு 3 மடங்கு அதிகமான நிதியை அளித்திருப்பதாகவும் அது மாநிலத்தின் வளர்ச்சிக்கு வெகுவாக உதவியுள்ளதாகவும் குறிப்பிட்டார். ஆனால் அவ்வளவு பணம் ஒதுக்கியும் சிலர் அழுவதாகவும் பிரதமர் விமர்சித்தார்.

மக்கள் நலனுக்காக சாலைகள், குடிநீர், மின்சாரம், மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் மத்திய அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்தும் பிரதமர் எடுத்துரைத்தார். குறிப்பாக இலவச மருத்துவ சிகிச்சைக்கு உதவும் ஆயுஷ்மான் பாரத் திட்டம் மூலம் 8 ஆயிரம் கோடி ரூபாய் ஏழைகளுக்கு மிச்சமாகியுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். தமிழகத்தில் தமிழில் மருத்துவக்கல்வி வழங்கப்பட வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.

தமிழ்நாட்டில் இருந்து அரசியல் தலைவர்கள் தனக்கு ஆங்கிலத்தில் கடிதம் எழுதுவதாகவும் அப்போது குறைந்தபட்சம் தங்கள் கையெழுத்தையாவது தமிழில் இடக்கூடாதா என்றும் பிரதமர் விமர்சித்தார். தமிழக மீனவர் நலனுக்காக தாங்கள் பாடுபட்டு வருவதாக குறிப்பிட்ட பிரதமர், இலங்கை சிறைகளில் இருந்து மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும் விவரித்தார். 100 ஆண்டுகளுக்கு முன் பாம்பன் பாலத்தை கட்டியது ஒரு குஜராத்தி என்றும் தற்போது புதிய பாலத்தை திறப்பதும் குஜராத்தி என்றம் பிரதமர் பெருமிதம் தெரிவித்தார்.