அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கை கொண்ட சோழபுரத்தை தலைநகராக கொண்டு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆட்சி புரிந்தவர் மாமன்னன் ராஜேந்திர சோழன். இவரது முப்பெரும் விழாவில் பிரதமர் மோடி இன்று கலந்து கொண்டார். முன்னதாக, பிரகதீஸ்வரர் ஆலயத்திற்கு சென்ற அவருக்கு, கோவிலில் பிரதமர் மோடிக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து சிற்பங்களைப் பார்வையிட்டார். பின்னர் பிரதமர் மோடி வாரணாசியில் இருந்து கொண்டுவந்த கங்கை நீரால் மூலவர் பெருவுடையாருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
அதைத் தொடர்ந்து விழா மேடைக்கு வந்த பிரதமர் மோடியை சைவ சித்தாந்த மடங்களைச் சேர்ந்த 25 ஆதீனங்கள் மற்றும் மடாதிபதிகள் வரவேற்றனர். தொடர்ந்து 40 ஓதுவார்கள் பிரதமர் முன்னிலையில் தேவாரப்பாடலை பாடினர். பின்னர் இசைஞானி இளையராஜாவின் திருவாசகம் சிம்பொனி இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதை பிரதமர் மோடி ஆர்வத்துடன் கேட்டு ரசித்தார். இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவான ஓம் சிவோகம் பாடல் இசைக்கப்பட்டது. ஓம் சிவோகம் பாடல் முடிந்தவுடன் இருக்கையில் இருந்து எழுந்து நின்று கைதட்டி இளையராஜா உள்ளிட்ட குழுவினரை வாழ்த்தினார். அதனைத் தொடர்ந்து ராஜேந்திர சோழனின் பெருமையை பறைசாற்றும் வகையில் நினைவு நாணயம் வெளியிடப்பட்டது.
திருவாசகம் உரைநடை நூலையும், சாகித்ய அகாடமியின் திருமுறை இசைப் புத்தகத்தையும் பிரதமர் மோடி வெளியிட்டார். இசைஞானி இளையராஜா இசையில் உருவாகி உள்ள பகவத் கீதையின் தமிழ்ப் பாடல்கள் அடங்கிய தொகுப்பையும் பிரதமர் மோடி வெளியிட்டார்.