ஒகி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வரும் 19-ஆம் தேதி பிரதமர் மோடி வரஉள்ளார்.
வங்கக்கடல் பகுதியில் உருவான ‘ஒகி’ புயல் காரணமாக, கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. அந்த நேரத்தில் ஏகப்பட்ட மின்கம்பங்கள், மரங்கள் சாய்ந்து விழுந்தன. இதில் சிக்கி பலர் உயிரிழந்தனர். மேலும் ஒகி புயல் நேரத்தில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற தமிழகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த ஏராளமான மீனவர்கள் மாயமாகினர். அவர்கள் இன்னும் முழுமையாக கண்டுபிடிக்கப்படவிலலை. மீனவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மாயமான மீனவர்களை விரைந்து மீட்கக்கோரி கன்னியாகுமரியில் போராட்டமும் தொடர்ந்து வருகிறது.
ஒகி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அண்மையில் வருகை புரிந்தார். அப்போது பாதிக்கப்பட்ட மக்களிடம் அவர் நேரில் ஆறுதல் கூறினார். இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வரும் 19-ஆம் தேதி பிரதமர் வர உள்ளதாக பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். பிரதமர் வருகை உறுதியாகியுள்ள நிலையில் அவரின் பயணத் திட்ட விவரம் இன்னும் தெரியவரவில்லை.