தமிழ்நாடு

தாம்பரம்: விபத்தில் சிக்கிய எஸ்ஐ-க்கு உதவச் சென்ற தலைமை காவலருக்கு நேர்ந்த பரிதாபம்

webteam

தாம்பரம் மகளிர் காவல் நிலையத்தில் பணியாற்றிய தலைமை காவலர் சாலை விபத்தில் சிக்கிய நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

சென்னை அடுத்த தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் ரமாபிரபா. இவர், கடந்த 16 ஆம் தேதி வீட்டிற்குச் சென்ற போது குரோம்பேட்டை அருகே விபத்து ஏற்பட்டு காயமடைந்ததாக, பெண் தலைமை காவலர் ஷீலா ஜெபமணிக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அவருக்கு உதவி செய்ய தலைமை காவலர் ஷீலா ஜெபமணி (51), தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த கார் மோதியதில் நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். இதில், தலையில் பலத்த காயமடைந்த நிலையில், அவரை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக அங்கிருந்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். விபத்து ஏற்படுத்திய கார் ஓட்டுநர் சக்தி (41) என்பவரை கைது செய்த குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், அவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.