தமிழ்நாடு

”13 வயதில் இருந்தே களத்தில் இருப்பவர் மு.க.ஸ்டாலின்” - பினராயி விஜயன், உமர் புகழாரம்

கலிலுல்லா

உமர் அப்துல்லா, பினராயி விஜயன் ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் சுயசரிதை நூல் வெளியிட்டுவிழாவில் பேசியிருப்பதை பார்ப்போம்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுயசரிதையான உங்களில் ஒருவன் நூலின் முதல் பாகத்தை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வெளியிட்டார். பினராயி விஜயன், தேஸ்வி யாதவ், உமர் அப்துல்லா உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர். நூல் வெளியீட்டு விழாவில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, பீகார் மாநில எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி, கவிஞர் வைரமுத்து, நடிகர் சத்யராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விழாவில் கலந்துகொண்டு பேசிய காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, ''செயலால் மக்கள் மனதில் நிற்பவர் ஸ்டாலின்.13 வயதில் இருந்தே களத்தில் இருப்பவர் மு.க.ஸ்டாலின்.உழைக்கும் மக்கள் மு.க.ஸ்டாலினை புரிந்து கொண்டுள்ளனர். மக்களின் மனநிலையை உள்ளாட்சித் தேர்தல் வெளிப்படுத்தியுள்ளது. மு.க.ஸ்டாலினின் சுயசரிதை பல பாகங்கள் தொடர்ந்து வெளிவர வேண்டும். ஜம்மு -காஷ்மீருக்கும் , தமிழகத்திற்கு பல நெருங்கிய தொடர்பு உள்ளது.காஷ்மீருக்காக தமிழகம் குரல் கொடுத்தது; அதற்காகவே நான் இங்கு நிற்கிறேன். தோளோடு, தோளாக நின்றதை நாங்கள் மறக்க மாட்டோம்.

எந்த மதத்தை பின்பற்ற வேண்டும் என்ற சுதந்திரம் இருந்தது. நான் எப்படி இருக்க வேண்டும் என்பது என்னுடைய உரிமை. மத அடையாளங்களை பின்பற்றுவது தனிமனித உரிமை. எந்தவித ஆடை அணிய வேண்டும் என்பது தனிமனித சுதந்திரம். பல வேற்றுமைகளை கொண்டதுதான் இந்தியா.

பல கொள்கைகள் இந்தியா முழுவதும் பரவி உள்ளன. வேற்றுமைகள் இருந்தாலும் ஒற்றுமையுடன் இருப்பதுதான் இந்தியாவின் சிறப்பு. மக்களின் ஒப்புதலின்றி ஜம்மு - காஷ்மீர் இரண்டாக பிரிக்கப்பட்டது. ஆளுநர் தமிழகத்தை 3ஆக பிரித்தால் ஏற்க முடியுமா?. ஜம்மு - காஷ்மீரில் தொடங்கியது அங்கேயே முடிய வேண்டும். மக்களிடம் பேசுவதற்காகவே ஜம்முவிலிருந்து நான் இங்கு வந்துள்ளேன். தமிழகத்துடனான உறவு பல தலைமுறைகளை கடந்தது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து'' என்றார்.

தொடர்ந்து பேசிய கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், ''இளைஞரணி தலைவராக இருந்து மாநிலத்தலைவராக ஸ்டாலின் உயர்ந்துள்ளார். படிப்படியாக முதலமைச்சராக உயர்ந்தவர். கூட்டாட்சிக்கு ஆபத்து வரும் போது முதல் நபராக நிற்பவர் மு.க.ஸ்டாலின். 'உங்களில் ஒருவன்’ ஸ்டாலினின் 23 வயது வரையிலான வாழ்க்கையை சொல்கிறது. 'உங்களில் ஒருவன்’ தமிழ்சமூக வரலாற்றையும் சொல்கிறது.முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பினராயி விஜயன் பிறந்தநாள் வாழ்த்து'' என்றார்.