தமிழ்நாடு

நிரம்பியது பில்லூர் அணை : மக்களுக்கு வட்டாட்சியர் எச்சரிக்கை

webteam

பில்லூர் அணையில் முழு கொள்ளளவை எட்டியதால் பவானி ஆற்றில் இறங்கவோ, பரிசலில் பயணிக்கவோ கூடாது என மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

தமிழக - கேரள எல்லையோரம் உள்ள மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணை நிரம்பியுள்ளது. அணைக்கு தற்போது வந்துகொண்டிருக்கும் 18 ஆயிரம் கனஅடிநீர், பவானியாற்றில் வெளியேற்றப்படுகிறது. இதனால் பவானியாற்றின் கரையோர பகுதியான மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை பகுதிகளுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. 

மேலும், ஆற்றில் இறங்கி யாரும் குளிக்கவோ, துணி துவைக்கவோ, மீன்பிடிப்பதோ, பரிசலில் பயணிப்பதோ கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதியில் வசிப்பவர்கள், பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.