தமிழ்நாடு

புகைப்பட ஞாபகத்திறன்: 3 வயதில் 13 விருதுகள் பெற்று சாதனை படைத்துள்ள சிறுவன்

புகைப்பட ஞாபகத்திறன்: 3 வயதில் 13 விருதுகள் பெற்று சாதனை படைத்துள்ள சிறுவன்

kaleelrahman

புகைப்பட ஞாபகத்திறன் வாயிலாக பல சாதனைகளை படைத்துள்ளார் சேலத்தைச் சேர்ந்த மூன்று வயது சிறுவன். மழலை மொழியில் உலக பிரபலங்களின் பெயர்களை கூறி சிறுவயதிலேயே 13 விருதுகளை அந்தச் சிறுவன் தன்வசமாக்கியுள்ளார்.

சேலம் செவ்வாய்பேட்டை பகுதியைச் சேர்ந்த சுரேஷ் நந்தினி தம்பதியின் மகன் தேஜஸ் (3). சென்னை ஐடி கம்பெனியில் பணியாற்றி வரும் இவர்கள் கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டிலிருந்து பணியாற்றும் சூழல் ஏற்பட்டுள்ளது. அப்போது தனது மகனின் தனித்திறனை கண்டுவியந்த நந்தினி, தேஜஸின் தனித்திறனை மெருகேற்ற முனைந்தார்.

அதன் விளைவாக கடந்த ஒராண்டில் தமிழ்ப்பல்கலைக் கழகத்தில் சிறப்பு டாக்டர் பட்டம் உள்ளிட்ட 13 பதக்கங்களையும் சான்றிதழ்களையும் சிறுவன் தேஜஸ் தன்வசமாக்கியுள்ளார். சுதந்திரப் போராட்ட வீரர்கள், அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள் என அந்தக் காலம் முதல் சமகாலம் வரையிலான 102 பிரபலங்களின் பெயர்களை புகைப்படங்களை பார்த்த உடன் கடகடவென இரண்டு நிமிடம் 46 விநாடிகளில் கூறி சாதனை படைத்துள்ளார்.

இதேபோல் 51 வண்ண மீன்களின் பெயர்களை ஒரு நிமிடத்திலும், 10 வகையான நாய் இனங்களை 23 வினாடிகளிலும், பத்து நாடுகளின் நாணயச் சின்னங்களை 7 வினாடிகளிலும், 19 மனித உறுப்புகளின் பெயர்களை 26 விநாடிகளிலும் தனது மழலை மொழியில் கூறி அசத்துகிறார் இச்சிறுவன். வெறும் பெயர்களை உச்சரிப்பது மட்டும் இல்லாமல், ஒவ்வொரு பிரபலங்களும் யார் அவர்களின் பெருமைகள் என்ன என்பதையும் இப்போதிலிருந்தே கொஞ்சம் கொஞ்சமாக தன் மகனுக்கு எடுத்துரைக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார் தாய் நந்தினி.

கொரோனா ஊரடங்கால் கிடைத்த நேரத்தை தங்களுக்கு சாதகமாக்கி சாதனை படைத்துள்ள சிறுவன் தேஜஸ் மற்றும் அவனது பெற்றோர் பலருக்கும் உதாரணமாக திகழ்கின்றனர்.