தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரில், தமிழ்த்தாய் வாழ்த்தை அரசு விழாக்களில் முதன்மையாகப் பாட வேண்டும் என்ற முதலமைச்சர் விஜயின் தீர்மானம் விவாதிக்கப்பட்டது. இதற்கிடையில் செல்போன் பயன்படுத்திய அமைச்சர் ஷாஜகானை சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் கடுமையாக எச்சரித்தார்.
செய்தியாளர் - M. மீரா
தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரின்போது, அவைக்குள் செல்போன் பயன்படுத்திய அமைச்சர் ஷாஜகானை சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் கண்டித்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அவைக்குள் செல்போன் கொண்டு வருவதற்கும், அதனைப் பார்த்துப் படிப்பதற்கும் அனுமதி இல்லை என்று சபாநாயகர் திட்டவட்டமாகத் தெரிவித்தார். இதையடுத்து, அமைச்சர் ஷாஜகான் தனது செல்போனை உடனடியாக கீழே வைத்தார்.
முன்னதாக, அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து முதன்மையாகப் பாடப்பட வேண்டும் என்ற தனித்தீர்மானத்தை முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் முன்மொழிந்தார். இதுகுறித்து பேசிய அவர், “தமிழ் வெறும் மொழி மட்டுமல்ல; அது நமது உயிரும் உணர்வும்” என்று தெரிவித்தார். முதலமைச்சரின் தீர்மானத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்தனர்.
’’முதல்வர் கொண்டு வந்துள்ள இந்தத் தீர்மானத்தை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் சார்பாக ஆதரித்து வழிமொழிகிறேன்’’ என செல்போனை பார்த்துப் பேசினார் ஐயூஎம்எல் அமைச்சர் ஷாஜகான். அவர் பேசி முடித்ததும் சபாநாயகர் ஜே.சி.டி. பிராபகர், அமைச்சர் ஷாஜகானுக்கு மட்டுமல்லாமல் அனைவருக்கும் ஒன்றை தெரிவிக்கிறேன்.
செல்போனை சட்டப்பேரவைக்கு கொண்டு வரக்கூடாது என்று ஒரு விதி உள்ளது. அதனைப் பார்த்து படிப்பதும், இங்கே உபயோகிப்பதும் விதிகளுக்கு முரணானது. அடுத்தமுறை அவையில் செல்போன் பயன்படுத்தக் கூடாது என அமைச்சருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் சபாநாயகர்.