Student Bharathidasan X
தமிழ்நாடு

மீண்டும் உலுக்கிய பாரதிதாசன்! பொங்கி எழுந்த மு.க.ஸ்டாலின்.. பரபரப்பு பின்னணி என்ன?

மாணவர் பாரதிதாசன் மீண்டும் மிகுந்த வருத்தத்துடன் பேசி வீடியோ வெளியிட்டுள்ளார்.

PT WEB

செய்தியாளர் - கார்த்திகேயன்

தமிழக அரசின் சார்பில் அம்பேத்கர் அயலக உயர்கல்வி என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ், தமிழகத்தில் உள்ள ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த ஏழை எளிய மாணவர்கள், வெளிநாடுகளுக்கு சென்று உயர்கல்வி பயில, உதவித் தொகை வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ், மலேசியாவில் உள்ள தேசிய பல்கலைகழகத்தில் ஆராய்ச்சி படிப்பு படித்து வரும் மாணவர் தான் பாரதிதாசன். கடந்த ஆகஸ்டு மாதம் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்த இவர், தனக்கான கல்வி உதவித் தொகை இன்னும் கிடைக்கவில்லை என்று கண்ணீர் மல்க கூறியிருந்தார்.

MK Stalin

இதுதொடர்பாக, சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பப்பட்டிருந்த நிலையில், அமைச்சர் வன்னி அரசு விளக்கம் அளித்திருந்தார். இந்த நிலையில், மாணவர் பாரதிதாசன் மீண்டும் வெளியிட்டுள்ள வீடியோவில், என்னை கல்லூரியில் இருந்து நீக்க போகிறார்கள். இன்னும் எனக்கான கல்வி உதவித் தொகை வரவில்லை. அக்டோபர் முதல் வாரத்தில், என்னுடைய ஆராய்ச்சி கட்டூரையை சமர்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இப்போது என்னால் அங்கும் போக முடியாத சூழல் உள்ளது” என்று கூறினார்.

மேலும், அரசு தனது ஒட்டுமொத்த அதிகாரத்தையும் பயன்படுத்தி, என்னை ஒடுக்க முயற்சிக்கிறார்கள். கல்வி உதவித் தொகையை ஆராய்ச்சிக்காக தான் பயன்படுத்தினாயா? என என்னிடம் கேள்வி கேட்கிறார்கள். நான் அனைத்து ஆதாரத்தையும் கொடுத்துவிட்டேன். நீங்கள் இவ்வாறு கேள்வி கேட்பதால், என்மீதான பேராசிரியர்களின் நம்பிக்கை உடைந்துவிட்டது என்றும், மிகுந்த வருத்தத்துடன் பேசியுள்ளார். மாணவர் பாரதிதாசனின் இந்த வீடியோவை பகிர்ந்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தவெக அரசுக்கு கடும் கண்டனங்களை பதிவு செய்துள்ளார்.

MK Stalin Tweet

“அரசு சார்பில் உறுதி அளிக்கப்பட்ட உரிமையை தான் மாணவர் பாரதிதாசன் கேட்கிறார். அவர் கேட்பது உதவி கிடையாது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால், ஒரு மாணவரின் பல ஆண்டு உயர்கல்வி கனவு பாழாக கூடாது. மாணவர் பாரதிதாசனுக்கு தேவைப்படும் நிதியை வழங்க முடியாது என்றால், அதனை முதலமைச்சர் வெளிப்படையாக அறிவித்துவிடுங்கள். திமுகவும், தமிழ்நாட்டு மக்களும் அந்த மாணவருக்கான கல்விக் கட்டணத்தை கட்டி படிக்க வைக்கிறோம்” என்று கூறியுள்ளார். மேலும், ரோகித் வெமுலாவுக்கு நடந்தது போல தனக்கும் நடக்கிறது என்று அந்த மாணவர் கூறியதை மேற்கோள் காட்டி பேசிய மு.க.ஸ்டாலின், எங்களுக்கு எதிர்கட்சியாகவே இருந்தால், இப்படி ஒரு அவப்பெயரை தவெக அரசு சுமக்க வேண்டாம் என்றும், தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.