தமிழ்நாடு

அதிமுக பிரமுகரின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு - ஈரோட்டில் பரபரப்பு

ஜா. ஜாக்சன் சிங்

ஈரோடு அருகே அதிமுக பிரமுகரின் பண்ணை வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி சென்ற மர்ம நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

ஈரோடை அடுத்த சிவகிரி அருகே அஞ்சூர் ஊராட்சி முத்துக்கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர்கள் சுந்தர்ராஜன்- விஜயலட்சுமி தம்பதியர். அதிமுக பிரமுகரான சுந்தர்ராஜனுக்கு சொந்தமான பண்ணை வீடு அதே பகுதியில் உள்ளது. இந்நிலையில், நேற்று அதிகாலை மர்ம நபர்கள் அந்த வீட்டில் இரண்டு பெட்ரோல் குண்டுகளை வீசினர். இதில், வீட்டின் கதவு மற்றும் காலிப்பகுதியில் தீப்பற்றி எரிய தொடங்கியது.

சத்தம் கேட்ட பண்ணை வீட்டில் பணியாற்றி வரும் ஆறுமுகம், இதுகுறித்து சுந்தர்ராஜனுக்கு தெரிவித்தார். இதையடுத்து, அவர் போலீசாருக்கு அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசிமோகன் நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், மோப்ப நாய் உதவியுடன் இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தேடும் பணியில் போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து சிவகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து குண்டு வீச்சுக்கு முன்விரோதம் காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணமா என விசாரித்து வருகிறார்கள்.