தமிழ்நாடு

அம்மா ஸ்கூட்டர் வருமா? வராதா?

அம்மா ஸ்கூட்டர் வருமா? வராதா?

webteam

50 சதவீத மானிய விலைக்கு இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தை அமல்படுத்த இடைக்கால தடைக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

திருச்செந்தூரை சேர்ந்த ராம குமார் ஆதித்தன், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில்  பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்," தமிழகத்தில் மானிய விலை இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம் பிப்ரவரி 24-ல் தொடங்கப்படுகிறது.இந்தத் திட்டத்தில் ஆண்டுக்கு 1லட்சம் பெண்களுக்கு இருசக்கர வாகனம் வாங்க மானியம் வழங்கப்படும். இருசக்கர வாகனத்தின் விலையில் 50 சதவீதம் அல்லது 25 ஆயிரம், இதில் குறைவான பணம் வழங்கப்படும். இதனால் ஆண்டுக்கு அதிகபட்சம் அரசுக்கு ரூ.250 கோடி வரை செலவாகும்.நடப்பாண்டில் ஒரு லட்சம் வாகனங்களை பெற 3,36,104 பெண்கள் விண்ணப்பித்துள்ளனர்.

இந்தத் திட்டத்தில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன. ஏற்கெனவே இருசக்கர வாகனம் வைத்திருப்பவர்கள் மீண்டும் இருசக்கர வாகனம் பெறுவதை தடுக்க விதிகள் இல்லை. இருசக்கர வாகனம் வாங்க 50 ஆயிரம் முதல் 75 ஆயிம் வரை செலவிட தயாராக இருந்தால் அவர் பொருளாதார ரீதியில் வலுவான நிலையில் உள்ளவர். இவர்களைப் போன்றவர்களுக்கு மானியம் வழங்க வேண்டியதில்லை. பொருளாதார ரீதியில் வலுவாக உள்ளவர்களுக்கு மானியம் வழங்குவது திட்டத்தின் நோக்கத்தை சீரழிப்பதாகும்.

தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு நூறு சதவீத மானியத்தில் சிறப்பு இருசக்கரம் வாகனம் வழங்கி வருகிறது. 50 சதவீத மானிய திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளும் சேர்க்கப்பட்டுள்ளனர்.திமுக ஆட்சியில் ரூ. 1.72 கோடி இலவச கலர் டிவி மற்றும் இலவச கேஸ் இணைப்பு, கேஸ் அடுப்பு வழங்க 3,942 கோடி செலவிடப்பட்டது. அடுத்து வந்த அதிமுக ஆட்சியில் 5 ஆண்டுகளில் இலவச கிரைண்டர், மிக்சி, லேப்டாப், சைக்கிள், வேஷ்டி, சேலை வழங்க 1.20 லட்சம் கோடி செலவு செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக தமிழக அரசின் நிதி நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. அரசின் நிதிப்பற்றாக்குறை அதிகமாக உள்ளது.

இதனால் தமிழகத்தில் நிதிப்பற்றாக்குறை முழுமையாக நீங்கும் வரை பழைய இலவசத் திட்டங்களை தொடரவும், புதிய இலவசத் திட்டங்களை அமல்படுத்தவும் கூடாது என்றும், அதுவரை 50 சதவீத மானிய விலைக்கு இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தை அமல்படுத்த இடைக்காலத் தடை விதித்தும் உத்தரவிட வேண்டும் " என மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.