தமிழ்நாடு

வைரமுத்து கட்டுரையை தடை செய்யக்கோரி வழக்கு

Rasus

தமிழை ஆண்டாள் என்ற தலைப்பில் வைரமுத்து எழுதிய கட்டுரையைத் தடை செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

வழக்கறிஞர்கள் மொய்தீன் இப்ராகிம், ஜி.பிரபு மற்றும் பெயின்ட்டிங் ஒப்பந்ததாரர் விக்டர் மற்றும் தமிழ் இலக்கியவாதியும் மென்பொருள் பொறியாளருமான கே.வி.எஸ். கண்ணன் ஆகியோர் கூட்டாக இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளனர். ஒற்றுமையையே அனைத்து மதங்களும் போதிப்பதாகக் கூறி, பகவத் கீதை, குரான் மற்றும் பைபிளில் இருந்து வரிகளும் மனுவில் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. ஆனால், கோடிக்கணக்கான மக்கள் வழிபடும் பெண் தெய்வமான ஆண்டாளை வேண்டுமென்றே, அவதூறான வகையில் புனிதத்தன்மையை கெடுக்கும் நோக்கில் வைரமுத்து கட்டுரை வெளியிட்டிருப்பதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் காவல் நிலையத்தில் கண்ணன் சார்பில் புகார் அளிக்கப்பட்டு, பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது. ஆனால், சர்ச்சைக்குரிய கட்டுரை இணைய தளம் மற்றும் செய்தித்தாள் வடிவில் எளிதாகக் கிடைப்பதாகவும் அதைத் தடை செய்ய தமிழக உள்துறைத் செயலருக்கு உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

வைரமுத்துவின் கட்டுரை அவதூறானது என்ற நிலையில், அதற்கு எதிர்கருத்து கூறிய ஹெச். ராஜா மாற்று மதக் கடவுள் குறித்து அவதூறு கூறியதுடன், தொடர்ந்து வைரமுத்துவை விமர்சிப்பதால் அவரையும் வழக்கில் பதில் மனுதாரராகச் சேர்க்கவும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.