தமிழ்நாடு

கிரிஜா வைத்தியநாதன் நியமனம் செல்லும்: சென்னை உயர்நீதிமன்றம்

webteam

பசுமைத்தீர்ப்பாய உறுப்பினராக கிரிஜா வைத்திய நாதன் தேர்வு செய்யப்பட்டதற்கு எதிர்த்து தொடரப்பட்ட மனு தள்ளபடி செய்து அவரின் பதவி நியமனம் செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

நியமனத்திற்கு எதிரான தடை நீங்கியதால் நாளை மறு நாள் தேசிய பசுமை தீர்ப்பாய நிபுணத்துவ உறுப்பினராக கிரிஜா பதவியேற்க வாய்ப்புள்ளது. 

வழக்கு விசாரணையில் பேசிய மத்திய அரசு, தீர்பாய நியமன விதிப்படியே கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், தகுதியிலாத விண்ணப்பதாரரை தேர்வு செய்வதில்லை என்றும் கூறியது. 

முன்னதாக, “ சென்னை உயர்நீதிமன்றத்தில் 'பூவுலகின் நண்பர்கள்' அமைப்பின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், மத்திய அமைச்சரவையின் பணி நியமனக் குழு கடந்த டிசம்பர் 12-ஆம் தேதி, தமிழகத்தின் தலைமைச் செயலாளராக பணியாற்றி ஓய்வுபெற்ற கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்ட 3 பேரை தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் நிபுணத்துவ உறுப்பினராக நியமனம் செய்ய ஒப்புதல் அளித்திருந்தது.

தேசிய பசுமைத் தீர்ப்பாய சட்ட பிரிவின்படி நிபுணத்துவ உறுப்பினராக நியமனம் செய்யப்படக் கூடிய நபருக்கு 15 ஆண்டுகள் இந்திய ஆட்சிப்பணி அனுபவமும், அதில் 5 ஆண்டுகள் சுற்றுச்சூழல் சார்ந்த துறையில் பணியாற்றிய அனுபவமும் இருக்க வேண்டும். கிரிஜா வைத்தியநாதனுக்கு 15 ஆண்டுகளுக்கு மேல் இந்திய ஆட்சிப்பணி அனுபவம் இருந்தாலும், 5 ஆண்டுகளுக்கு சுற்றுச்சூழல் சார்ந்த பணிகளின் அனுபவம் இல்லை. அவர் 3 ஆண்டுகள் 6 மாத காலம் மட்டுமே சுற்றுச்சூழல் துறையில் பணியாற்றிய அனுபவத்தைக் கொண்டுள்ளார்.

எனவே அவரது நியமனம் தேசிய பசுமைத் தீர்ப்பாய விதிகளுக்கு எதிரானது. இதனைக் கருத்தில் கொண்டு அவரது நியமனத்தை ரத்து செய்ய வேண்டும்" எனக் கோரப்பட்டிருந்தது.

இதைத்தொடர்ந்து தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் நிபுணத்துவ உறுப்பினராக கிரிஜா வைத்தியநாதன் நியமனம் செய்யப்பட்டதற்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில் தற்போது மனு தள்ளுபடி செய்யப்பட்டதால் அவர் நாளை மறுநாள் பதிவியேற்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.