தமிழ்நாடு

சமூக அமைதி பாதுகாப்புச் சட்டத்தை இயற்ற வேண்டும் - முதல்வருக்கு பீட்டர் அல்போன்ஸ் கோரிக்கை

JustinDurai

சாதி, மத மோதல்களை உருவாக்கி அதன் மூலம் அரசியல் ஆதாயம் அடைய முயல்வோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு சமூக அமைதி பாதுகாப்புச் சட்டத்தை இயற்ற வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மாநில சிறுபான்மையினர் நல ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்தவ பாதிரியார் ஒருவரின் பேச்சு சகோதர மதத்தினரின் உணர்வுகளை புண்படுத்துவதாக இருந்தது என்பதால் அவர் கைது செய்யப்பட்டதையும், நாமக்கல் மாவட்டத்தில் கிறிஸ்தவ வழிபாட்டுக்கூடம் இருக்கும் இடத்தில் , நடு இரவில் விநாயகர் சிலையை சிலர் வைத்துச் சென்றதையும் பீட்டர் அல்போன்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார். சாதி, மத மோதல்களை உருவாக்கி அதன்மூலம் அரசியல் ஆதாயம் அடைய திட்டமிட்டு செயலாற்றும் அனைவரையும் மாவட்ட ரீதியாக அடையாளம் காண்டு, தகுந்த நடவடிக்கை எடுக்க சமூக அமைதி பாதுகாப்புச் சட்டத்தை இயற்ற வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.

சமூக அமைதியை ஏற்படுத்தும் பணியில் , மாவட்ட ஆட்சியருக்கும், காவல்துறை கண்காணிப்பாளருக்கும் உதவ, ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு சமூக நல்லிணக்க குழுவினை ஏற்படுத்த வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.