Accused
Accused pt desk
தமிழ்நாடு

"எனக்கே தெரியாம என் நிலத்தை வித்துட்டாங்க" - புகார் செய்த முதியவர்; மோசடி நபரை கைது செய்த போலீஸ்!

Kaleel Rahman

சென்னை ராயப்பேட்டை அங்கமுத்து தெருவைச் சேர்ந்தவர் சுப்புராயுடு (63). இவர், காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே 3,474 சதுரடி நிலத்தை கடந்த 1996 ஆம் ஆண்டு ராணி என்பவரிடமிருந்து கிரையம் பெற்று வைத்திருந்தார். இந்நிலையில் சுப்புராயுடு, தனது நிலத்தை பார்ப்பதற்காக சென்றுள்ளார். அப்போது, அப்பகுதியில் இருப்பவர்கள் நீங்கள் நிலத்தை விற்று விட்டீர்களே மீண்டும் எதற்காக வந்து பார்க்கிறீர்கள் என்று கேட்டுள்ளனர்.

Police Commissioner office

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சுப்புராயுடு, எனது நிலத்தை யாருக்கும் நான் விற்கவில்லை என்று கூறியுள்ளார். இதையடுத்து சுப்புராயுடு குன்றத்தூர் பத்திரப் பதிவு அலுவலகத்திற்குச் சென்று வில்லங்கச் சான்று எடுத்து பார்த்துள்ளார். அப்போது, சுப்புராயுடுக்கு சொந்தமான 3,474 சதுரடி நிலம் வித்யா மற்றும் கீதா ஆகியோர் பெயரில் பத்திரப்பதிவு செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து சுப்புராயுடு ஆவடி காவல் ஆணையரகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவில் புகார் செய்தார்.

இதையடுத்து ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின் பேரில், காவல் ஆய்வாளர் ரஜினிகாந்த் தலைமையிலான போலீசார், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் சென்னை அனகாபுத்தூர், எம்.ஜி.ஆர் நகர்,1வது தெருவை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரான தியாகு (38) என்பவர் கடந்த 2019 ஆம் ஆண்டு சுப்புராயுடு என்ற பெயரில் போலியான ஆவணம் தயாரித்து தியாகு என்ற பெயருக்கு பொது அதிகாரம் எழுதி கொடுத்ததை போன்று குன்றத்தூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் போலியான பத்திரம் எழுதி கொடுத்து அதை வைத்து வித்யா என்பவருக்கு 1,900 சதுர அடியும், கீதா என்பவருக்கு 1,574 சதுர அடியும் பிரித்து விற்பனை செய்திருப்பது தெரியவந்தது.

Police Commissioner office Building

மோசடி செய்யப்பட்ட நிலத்தின் மதிப்பு ரூ.1.50 கோடியாகும். இதையடுத்து, தியாகுவை கைது செய்த போலீசார், திருவள்ளூர் நில அபகரிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.