செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்தவர் 80 சதவீத மாற்றுத்திறனாளியான பெண். இவருக்கு வயது 27. இவரை பக்கத்து வீட்டுல் வசித்துவரும் நபர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால், அப்பெண் கருவுற்றுள்ளார். இதனையடுத்து சம்பவம் குறித்து பெண்ணின் தாயார் காவல்துறைநிலையத்தில் புகார் அளித்தநிலையில், வழக்கு பதியப்பட்டது.
இந்தநிலையில், பாதிக்கப்பட்டப் பெண், தனது வயிற்றில் இருக்கும் கருவை அழிக்க வேண்டும் என்று செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பெற்றோருடன் சென்று கேட்டுள்ளார். ஆனால், 28 வார கரு என்பதால் கருவை கலைக்க மருத்துவமனை நிர்வாகம் மறுத்துள்ளது.
இந்தநிலையில், பாதிக்கப்பட்ட தனது மகளின் கருவை அகற்றக்கோரி பெண்ணின் தாயார் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.
இவ்வழக்கை நீதிபதி டி. பரதசக்கரவர்த்தி கடந்த செவ்வாய்க்கிழமை அன்று விசாரித்தார். விசாரணையின் முடியில், இதுகுறித்து கருத்து தெரிவித்த நீதிபதி கருவை கலைப்பதற்கு அனுமதிக்கத்தக்க காலக்கெடுவான 24 வாரங்கள் கடந்துவிட்ட போதிலும் , பாதிக்கப்பட்ட பெண் 80 சதவீதம் மாற்றுத்திறனாளி என்பதை கருத்தில் கொண்டு கருவை அகற்றலாம் என்றும்,
எனவே, உடனடியாக மருத்துவக்குழுவை அமைத்து ஆய்வு செய்து கருவை கலைக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார். இதற்கு மேல் கருவை கலைக்க முடியாது என்றால் அந்த தகவலை மனுதாரருக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.