தமிழ்நாடு

ஊரடங்கு தளர்வுகள்: திருமண நிகழ்வுகளுக்கான கட்டுப்பாடு விவரம்

Sinekadhara

ஊரடங்கு தளர்வுகளில் திருமணம் நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்ததால் கடந்த மே 24 முதல் தளர்வில்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அடுத்தடுத்து மே 31, ஜூன் 7, ஜூன் 14-ம் தேதி என 3 கட்டமாக முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இருப்பினும், தொற்று அதிகமாக இருந்த 11 மாவட்டங்களில் குறைவான தளர்வுகளும் மீதமுள்ள சென்னை உள்ளிட்ட 27 மாவட்டங்களில் அதிகமான தளர்வுகளும் அளிக்கப்பட்டன. கடந்த ஜூன் 14-ம் தேதி முதல் நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு நாளையுடன் (ஜூன் 21) முடிவடைகிறது.

இந்த நிலையில் தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நாளை முதல் ஜூன் 28 வரை கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதில் பாதிப்பு மற்றும் தொற்று எண்ணிக்கையை வைத்து தளர்வுகள் 3 வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஊரடங்கு தளர்வுகளில் திருமணம் நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, திருமணத்திற்காக அரியலூர், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சி, விழுப்புரம், வேலூர், விருதுநகர், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு இடையே இ-பாஸ் பெற்று பயணம் செய்ய அனுமதிக்கப்படும்.  இதற்கான இ-பாஸ் திருமணம் நடைபெறவுள்ள மாவட்டத்தின் மாவட்ட ஆட்சியரிடமிருந்து இணையவழியாக (https://eregister.tnega.org) விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம்.

திருமண நிகழ்வுகளில் 50 பேர் மட்டுமே கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.