தமிழ்நாடு

பெரியார் சிலை இடிக்கப்படும்: ஹெச்.ராஜா மிரட்டல்

webteam

திரிபுராவில் லெனின் சிலை இடிக்கப்பட்டது போல் தமிழகத்தில் பெரியார் சிலை இடிக்கப்படும் என பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா தெரிவித்துள்ளார்.

திரிபுராவில் பெலோனியா என்ற இடத்தில் இடதுசாரி புரட்சியாளர் லெனின் உருவச்சிலை புல்டோசர் உதவியுடன் இடித்துத் தள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் இதுதொடர்பாக தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா,  “ லெனின் யார்? அவருக்கும் இந்தியாவிற்கும் என்ன தொடர்பு. கம்யூனிசத்திற்கும் இந்தியாவிற்கும் என்ன தொடர்பு. இன்று திரிபூராவில் லெனின் சிலை.. நாளை தமிழகத்தில் ஈ.வெ.ராமசாமி சிலை” எனப் பதிவிட்டுள்ளார்.

திரிபுராவில் கடந்த 25ஆண்டுகளாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியில் இருந்தது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. இதனையடுத்து பாஜக தொண்டர்களுக்கும் மார்க்சிஸ்ட் கட்சி தொண்டர்களுக்கும் இடையே சில இடங்களில் மோதல் வெடித்துள்ளது.