தமிழ்நாடு

அபுதாபியில் உயிரிழந்த தமிழர்: பெரம்பலூர் எம்பி முயற்சியால் தமிழகம் வந்த உடல்

webteam

அபுதாபியில் உயிரிழந்த தமிழக தொழிலாளியின் உடல், பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் பாரிவேந்தரின் முயற்சியால் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது.

பெரம்பலூர் அருகே கல்பாடி எறையூர் கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமார், அபுதாபியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் கடந்த 10 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். இம்மாதம் 4ஆம் தேதி உடல்நலக் குறைவால் அங்கேயே மரணமடைந்தார். இது குறித்து தகவலறிந்த விஜயகுமாரின் மனைவி மற்றும் உறவினர்கள், உயிரிழந்த விஜயகுமாரின் உடலை இந்தியா கொண்டு வர உதவிடுமாறு பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் பாரிவேந்தரிடம் கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து, துபாயில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்ட பாரிவேந்தர், விஜயகுமாரின் உடலை இந்தியா கொண்டுவர முயற்சி மேற்கொண்டார். 11 நாள்களுக்கு பிறகு, உயிரிழந்த விஜயகுமாரின் உடல் தனி விமானம் மூலம் சென்னைக்கு கொண்டுவரப்பட்டது.

பின்னர் அங்கிருந்து சொந்த ஊரான‌ கல்பாடி எறையூர் கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது. வெளிநாட்டில் உயிரிழந்தவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வருவதற்கு முயற்சிக‌ள் மேற்கொண்ட பாரிவேந்தருக்கு, விஜயகுமாரின் குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.