தமிழ்நாடு

பெரம்பலூர்: பாஜக மாநில நிர்வாகியின் வீட்டின் மீது கல்வீசி தாக்கிய மர்ம கும்பல்

webteam

பெரம்பலூர் அருகே பாஜக மாநில நிர்வாகியின் வீட்டுக்குள் நிறுத்தியிருந்த காரை மர்ம கும்பல் ஒன்று அடித்து நொறுக்கியதோடு வீட்டின் மீது கல்வீசி தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறை கிராமத்தைச் சேர்ந்தவர் தடா பெரியசாமி. இவர், பாஜக பட்டியல் அணி மாநில தலைவராக உள்ளார். இந்நிலையில் நேற்றிரவு வழக்கம் போல் தனது வீட்டின் முன்பு காரை நிறுத்தி விட்டு வீட்டினுள் இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த மர்ம கும்பல் இவரது வீட்டுக்குள் புகுந்து காரை கற்கள் மற்றம் கட்டையால் அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர். வீட்டின் மீதும் கல்வீசி தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடிவிட்டனர்.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த தடா பெரியசாமி கட்சி நிர்வாகிகள் மற்றும் காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மங்கலமேடு காவல்துறையினர், இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பாஜகவினரும் அங்கு கூடியிருப்பதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தனது வீட்டுக்குள் அத்துமீறி புகுந்து தாக்குதல் நடத்தியது விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தான் என தடா பெரியசாமி குற்றம் சாட்டினார்.