தமிழ்நாடு

தென்காசி: தேர்தலில் குறைந்த வாக்குகள் பெற்றவர் வென்றதாக அறிவித்ததாக கூறி மக்கள் போராட்டம்

Sinekadhara

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே அதிக வாக்குகள் பெற்ற பெண் உறுப்பினரை வெற்றி பெற்றவராக அறிவிப்பதற்கு பதில், குறைந்த வாக்குகள் பெற்றவரை வெற்றிபெற்றவராக அறிவித்துள்ளதாகவும், அதனால் மீண்டும் தேர்தல் நடத்த வேண்டுமெனவும்கோரி கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலநீலிதநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கோ. மருதப்பபுரம் ஊராட்சித் தலைவர் தேர்தலில் வீரம்மாள் என்பவர் வெற்றிபெற்றதாக அதிகாரிகள் அறிவித்தனர். ஆனால், கோ.மருதப்பபுரம் இந்திரா காலனியைச் சேர்ந்த விஜயலட்சுமி அதிக வாக்குகள் பெற்றநிலையில், குறைந்த வாக்குகள் பெற்ற வீரம்மாளை வெற்றிபெற்றதாக அறிவித்ததாக கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதனால் இங்கு மறுதேர்தல் நடத்தக்கோரி, முத்துகிருஷ்ணாபுரம், சண்முகநல்லூர் கிராமங்களைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் திருநெல்வேலி பிரதான சாலையில் உள்ள சண்முக நல்லூரில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.