தமிழ்நாடு

கன்னியாகுமரியில் கறுப்பு ஸ்டிக்கரால் அச்சப்படும் பொதுமக்கள்..!

Rasus

கன்னியாகுமரியில் கறுப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட வீடுகளில் இருந்து குழந்தைகளை கடத்திச் செல்வதாக பரவிய தகவலால், சந்தேகத்துக்குரிய வடமாநிலத்தவர்களைப் பிடித்து பொதுமக்களே காவல்துறையினர் வசம் ஒப்படைக்கின்றனர். இதில், வடமாநிலத்தவர்கள் பலர் தாக்கப்படும் சம்பவமும் நிகழ்கிறது.

வீடுகளின் முன்பாக ஒட்டப்படும் கறுப்பு ஸ்டிக்கர், கன்னியாகுமரி மாவட்ட மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக, கடந்த‌ 3 வாரங்களாக கன்னியாகுமரி மாவட்டத்தில் குழந்தைகள் உள்ள வீடுகளில் இந்த கறுப்பு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன. அந்த ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ள வீடுகளில் உள்ள குழந்தைகள் கடத்தப்படுவார்கள் என சமூகவலைதளங்களில் தகவல் பரவி வருவதால், பெற்றோரும், அப்பகுதி மக்களும் அச்சமடைந்துள்ளனர்.

ஆனால் இன்று வரை அந்த ஸ்டிக்கர் ஒட்டப்பட்டதற்கான முழுகாரணமும், அதனை ஓட்டியது யார் என்பதும் தெரியவில்லை. இதன் விளைவாக வடமாநில தொழிலாளர்கள் மீதான சந்தேக பார்வையும், தாக்குதல் சம்பவங்களும் அதிகரித்துள்ளன. தமிழகத்தில் ஆங்காங்கே வடமாநில நபர்களால் நிகழும் கொள்ளை சம்பவங்களும் இதற்கு காரணமாய் அமைகின்றன.

மார்த்தாண்டம் அருகே வடமாநில பெண் ஒருவர் குழந்தையை கடத்த முயற்சிப்பதாக கிராம மக்கள் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதேபோல், சிலர் தாக்குதலுக்கும் உள்ளாகியும் வருகின்றனர். மேலும், சந்தேகப்படும் வகையில் யாரேனும் இருந்தால் உடனடியாக அவர்களை பிடித்து, அடித்து காவல்நிலையத்தில் ஒப்படைக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இந்த விவகாரம் குறித்து காவல்துறை முறையாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.