தமிழ்நாடு

விபரீதத்தில் முடிந்த டிக் டாக்... கழுத்தை அறுத்த இளைஞர்..!

விபரீதத்தில் முடிந்த டிக் டாக்... கழுத்தை அறுத்த இளைஞர்..!

webteam

இப்போது ஸ்மார்ட்போன்கள் இல்லாத நபர்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு சிட்டி முதல் கிராமம் வரை கிட்டத்தட்ட அனைவரது கைகளிலும் ஸ்மார்ட்போன்கள் உள்ளன. முன்பெல்லாம் குழந்தைகள் தான் கேம் விளையாட ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தினார்கள்.  இளசுகள் சாட்டிங்கில் மூழ்கிக் கிடந்தனர். ஆனால் பெரியவர்கள் பெரும்பாலும் யாரிடமாவது பேச வேண்டும் என்றால் மட்டும் போன்களை எடுப்பார்கள். ஆனால் இப்போது நிலைமை அப்படியல்ல. அடுத்தடுத்து வரும் புதிய புதிய ‘ஆப்’ஸ்கள் அனைத்து தரப்பு மக்களையுமே ஸ்மார்ட்போனுக்குள் கட்டி போட்டுள்ளது. அதில் ஒன்றுதான் டிக் டாக் ஆப்ஸ்.

பாத்ரூமுக்குள் நடமானடியவர்கள், மேடைகளில் நடனமாட ஆசைப்பட்டவர்கள், இன்னும் ஆசைப்படுபவர்கள் இப்படி கலைத்திறமையை தங்களுக்குள் ஒளித்து வைத்தவர்கள் என அனைவரும் பயன்படுத்தும் ஒரு ‘ஆப்’ஸ்காக டிக் டாக் உள்ளது. இந்த ‘ஆப்’ பொறுத்தவரை ஏராளமான சின்ன சின்ன ஆடியோக்கள் இருக்கும். அந்த ஆடியோக்களில் சினிமா வசனங்களோ இல்லையென்றால் சினிமா பாடல்களோ இருக்கும். அதற்கு நாம் உயிர் கொடுக்க வேண்டும். அதாவது வெள்ளித் திரையில் அந்த காட்சி வரும்போது எப்படி நடிகர்? நடிகைகள் நடிப்பார்களோ அப்படியே நாமும் நடிக்க வேண்டும். வெள்ளித் திரை காட்சிகள் மட்டுமல்ல விளம்பர காட்சிகள், நாடக டயலாக் என அனைத்தும் டிக் டாக் ஆப்ஸ்களில் உள்ளன.

நமக்கு அருகில் இருக்கும் நபர் ஒருவர் நம் அழைப்பையும் கவனிக்காமல் செல்போன் முன் ஏதாவது பேசி கொண்டிருக்கிறார் என்றால் நிச்சயம் டிக் டாக் ‘ஆப்’ஸில் அவர் மூழ்கியிருப்பதை நீங்கள் அறியலாம். அப்படித்தான் உண்மையான காட்சிகள் தோற்றுவிடும் அளவிற்கு நடிக்க ஆசைப்பட்டு அவர்கள் தங்கள் நிலையை மறந்துவிடுகின்றனர். அத்துடன் மெனக்கெடல் நடிப்பிற்காக எந்தவொரு விபரீதத்தையும் கையில் எடுக்கின்றனர். சிலர் கைக்குழந்தையை வைத்து டிக் டாக் செய்கின்றனர். அந்த குழந்தைக்கு அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதே புரிவதில்லை.

சமீபத்தில் இணையத்தில் வேகமாக ஒரு வீடியோ பரவிக்கொண்டிருக்கிறது. அதவாது கையில் கத்தியுடன் இளைஞர் ஒருவர் டிக் டாக் செய்கிறார். அப்படி செய்யும்போது அந்த நடிப்பிலேயே மூழ்கிய அந்த இளைஞர் தனது கவனத்தையும் மீறி கத்தியால் தன் கழுத்தையே அறுத்துவிடுகிறார். பின்னர் கத்தியில் இரத்தம் இருப்பதை கண்டு சுதாகரிக்கிறார். 

என்னதான் நடிப்பு ஆர்வம் இருந்தாலும் சிலர் வெறும் லைக்ஸ்களுக்காகவும், ஷேர்களுக்காகவே இதை செய்கின்றனர். நம் வீடியோவும் ஒருநாள் வைரல் ஆகிவிடாதா என்று அவர்கள் செய்யும் இந்த செயல் அவர்களின் உயிர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தி விடும் என்பதை அவர்கள் உணராமல் இருக்கின்றனர். இதனிடையே சமூக வலைத்தளங்களை நல்ல நோக்கில் பயன்படுத்த வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.