தை அமாவாசை - காவிரி கரையில் குவிந்த மக்கள் pt desk
தமிழ்நாடு

திருச்சி | தை அமாவாசையை முன்னிட்டு முதாதையர்களுக்கு சிறப்பு வழிபாடு - காவிரி கரையில் குவிந்த மக்கள்

திருச்சியில் தை அமாவாசையை முன்னிட்டு முதாதையர்களுக்கு திதிகொடுத்து வழிபாடு செய்ய அம்மா மண்டபம் காவிரி ஆற்றில் ஆயிரக்கணக்கானோர் குவிந்துள்ளனர்.

PT WEB

செய்தியாளர்: வி.சார்லஸ்

தை அமாவாசை இந்து சமய மக்களின் புனிதமும் சிறப்பும் மிகுந்த தினமாகும். தை மாதத்தில் வரும் இந்த அமாவாசை தினத்தன்று தாய், தந்தையரை இழந்தோர் தங்களின் பெற்றோர் மற்றும் மறைந்த மூதாதையரை நினைத்து விரதம் கடைபிடிப்பர். ஆண்டின் பிற அமாவாசை நாட்களில் விரதம் கடைபிடிக்க இயலாதவர்கள், தை அமாவாசையன்று ஆறு, கடல் போன்ற புனித நீர்நிலைகளில் குளித்து மூதாதையர்களுக்கு படையல் செய்து சிறப்பு வழிபாடு செய்வர்.

தை அமாவாசை - காவிரி கரையில் குவிந்த மக்கள்

இதனால் முன்னோர்களின் ஆசிர்வாதம் தங்களுக்கும், தங்களது குடும்பத்தினருக்கும் என்றென்றும் கிடைக்கும் என நம்புவர். அப்படி தை அமாவாசை தினமான இன்று திருச்சி அம்மா மண்டபம் படித்துறை அருகே காவிரி ஆற்றில் நீராடி பின்னர் தங்களது மூதாதையர்களுக்கு திதிகொடுத்து, ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கி வழிபாடு செய்து வருகின்றனர் அப்பகுதி மக்கள்.

இதில், திருச்சி மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் வந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு மேற்கொண்டனர். அதனைத் தொடர்ந்து காவிரி தாயாரையும் பின்னர் ஸ்ரீரங்கம், திருவானைக்காவல், சமயபுரம் உள்ளிட்ட ஆலயங்களுக்குச் சென்றும் வழிபாடு செய்தனர். பாதுகாப்பு பணியில் 200க்கும் மேற்பட்ட காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.