தமிழ்நாடு

கழுத்தளவு நீரில் சடலத்தை சுமக்கும் மக்கள் : அரியலூரில் அவலநிலை

கழுத்தளவு நீரில் சடலத்தை சுமக்கும் மக்கள் : அரியலூரில் அவலநிலை

webteam

அரியலூரில் இறந்தவர்களின் உடலை கழுத்தளவு தண்ணீரில் மக்கள் சுமந்து செல்லும் அவலநிலை நீடிக்கிறது.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கழுவந்தோண்டி கிராமத்தில் நைனார் ஏரி உள்ளது. இந்த ஏரி சுமார் 64 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரியின் கரையில்தான் மயான கோட்டைக்கு செல்லும் சாலை உள்ளது. ஒவ்வொரு வருடமும் மழை காலங்களில் இறப்பவர்களை மயானத்திற்கு கொண்டு செல்ல கழுத்தளவு தண்ணீரில் சுமந்து செல்ல வேண்டியுள்ளது. இந்த அவலம் இன்றும் தொடர்கிறது. கோசலம் என்ற மூதாட்டி உடல் நிலை சரியில்லாமல் நேற்று மாலை உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து அவரை அடக்கம் செய்வதற்காக மயான கோட்டைக்கு கொண்டு சென்றனர். அப்போது நீர் நிரம்பி இருந்த நைனார் ஏரியில் கழுத்தளவு தண்ணீரில் உயிரை பணையம் வைத்து இறந்தவரின் உடலை மக்கள் தூக்கி சென்றனர். ஏரியின் வடிகால் அருகே மக்கள் ஆபத்தான முறையில் பயணம் செய்வது காண்போரை அச்சமடைய செய்யும் வகையில் உள்ளது.

இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மக்கள் தெரிவித்தனர். இதுதொடர்பாக புதிய தலைமுறையில் செய்தி வெளியிடப்பட்டது. இந்நிலையில் வட்டாட்சியர் கலைச்செல்வன் மயானத்திற்கு செல்லும் சாலையை நேரில் ஆய்வு செய்தார். வடிகால் பகுதியில் பாதை அமைக்க ரூ.35 லட்சம் ரூபாய்க்கான ஆணை பெற்ற பிறகு இரண்டு மாதங்களில் பணிகள் தொடங்கும் எனவும் அவர் தெரிவித்தார்.