"பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்களுக்கு பாதிப்பு இல்லை" என்று தமிழக பாஜக துணைத் தலைவர் அண்ணாமலை கூறினார்.
பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத் தலைவர் அண்ணாமலை ‘விவசாயிகளின் நண்பன் மோடி’ என்ற நிகழ்ச்சிக்காக இன்று திண்டுக்கல்லுக்கு சென்றார். அப்போது செய்தியாளரிடம் அவர் கூறும்போது “தமிழகத்தில் தாசில்தாரில் இருந்து மேலே உள்ள அனைத்து துறைகளிலும் லஞ்சம் அதிகமாக உள்ளது. அரசியல் முதல் அரசு அலுவலகம் வரை ஊழல் புரையோடி உள்ளது. ஒப்பந்தம் வாங்குவது முதல் பிறப்பு சான்றிதழ் வாங்குவது வரை அனைத்துத் துறைகளிலும் ஊழல் புரையோடி இருக்கிறது.
மக்களிடம் கொள்ளையடித்த பணத்தை 2,000, 2,500 ஆக தேர்தல் நேரத்தில் மக்களிடம் கொடுப்பதுதான் தமிழக அரசியலின் வாடிக்கை. எங்களுக்கும் அதிமுகவுக்கும் இடையே கொள்கை ரீதியாக வேறுபாடு உள்ளது” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வு குறித்து கேள்வி கேட்டபோது “பிஜேபிக்கு 2021 வாய்ப்பு கொடுங்கள். மத்திய அரசுக்கு வருமானம் வேண்டும் என்கின்ற காரணத்தினால்தான் பெட்ரோல், டீசல், கேஸ் விலையை மத்திய அரசு உயர்த்துகிறது. இதனால் மக்கள் பாதிக்கப்படவில்லை” என்றார்.