தமிழ்நாடு

விஷமருந்திய பெண்ணுக்கு அவசர சிகிச்சை: ஓடி வந்து உதவிய எம்எல்ஏ

webteam

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வட்டுவன அள்ளி, ஏரிமலை, கோட்டூர்மலை, அலக்கட்டு உள்ளிட்ட மலை கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு நிவாரண உதவி வழங்குவதற்காக திமுக எம்எல்ஏ இன்பசேகரன் சென்றார். அப்பொழுது ஏரிமலையைச் சேர்ந்த பெண் ஒருவர், பூச்சி மருந்து உட்கொண்டு ஆபத்தான நிலையில் இருந்துள்ளார்.

சாலை வசதி இல்லாததால் பூச்சிமருந்து உட்கொண்ட பெண்ணை மூன்று கிலோ மீட்டர் தூரத்திற்கு உறவினர்கள் தோள் மீது வைத்துத் தூக்கிக் கொண்டு வந்தனர். அப்போது நிவாரணம் வழங்குவதற்காக சென்ற பென்னாகரம் திமுக எம்எல்ஏ இன்பசேகரன், பூச்சிமருந்து உட்கொண்ட பெண்ணை தனது வாகனத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவ வசதி கிடைக்க ஏற்பாடு செய்தார்.

(இன்பசேகரன் எம்எல்ஏ)

 இதுகுறித்து கருத்து தெரிவித்த எம்எல்ஏ இன்பசேகரன்,வட்டுவன அள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட மலைக்கிராமங்களான கோட்டூர் மலை, ஏரிமலை, அலக்கட்டு உள்ளிட்ட மலை கிராமங்களுக்கு சாலை வசதி செய்து தரவேண்டும் என சட்டமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளேன். ஆனால் இந்த நாள் வரை மலை கிராமங்களுக்கு சாலை வசதி செய்து தரப்படவில்லை என தெரிவித்தார்.

பென்னாகரம் தொகுதிக்கு உட்பட்ட மலைக்கிராமங்களில் சுமார் 500க்கும் அதிகமான குடும்பங்கள் இருப்பதாகவும் சாலை வசதி இல்லாததால் நோய்வாய்ப்பட்டவர்கள், கர்ப்பிணிகள் போன்றோரை 8 கிமீ தோள்களில் சுமந்து வர நேரிடுவதாகவும் கூறப்படுகிறது. இதனால் உடனடியாக சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டுமென்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.