தமிழ்நாடு

7 நாட்களுக்குள் ரூ.29 கோடி செலுத்துக! - கப்பலூர் சுங்க சாவடி நிர்வாகம் அனுப்பிய நோட்டீஸ்

ச. முத்துகிருஷ்ணன்

ரூ.29 கோடி நிலுவைக் கட்டணத்தை 7 நாட்களுக்குள் செலுத்துமாறு மதுரை அரசு போக்குவரத்து கழகத்திற்கு கப்பலூர் சுங்கச்சாவடி நிர்வாகம் நோட்டீஸ்!

மதுரை மாவட்டம் திருநெல்வேலி- விருதுநகர் செல்லும் நான்கு வழிச்சாலையில் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையகத்தின் சார்பில் கப்பலூர் பகுதியில் 12 ஆண்டுகளுக்கு முன்பாக சுங்கச் சாவடி துவங்கப்பட்டது. இந்த சுங்கச் சாவடியில் திருமங்கலம் முதல் பேரையூர் வரை செல்லக்கூடிய உள்ளூர் வாகனங்கள் மற்றும் கப்பலூர் சிப்காட் மற்றும் தொழிற்சாலைகளுக்கு செல்லகூடிய வாகனங்களுக்கும் சுங்கக் கட்டணம் வசூலிப்பதால் இதற்கு எதிராக பல்வேறு போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. இதனையடுத்து தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டும் எந்த பயனும் ஏற்படவில்லை.

இதனால் நாள்தோறும் சுங்கச் சாவடியில்கட்டண வசூலின்போது அடிக்கடி வாக்குவாதம் ஏற்படுவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் கூட செல்ல முடியாத நிலை நாள்தோறும் தொடர்வதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மதுரை அரசு போக்குவரத்து கழகத்திற்கு கப்பலூர் சுங்கச்சாவடி நிர்வாகம் ரூ.29 கோடி நிர்வாகம் நிலுவைத் தொகையை செலுத்துமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தற்போது சுங்கச்சாவடியை பயன்படுத்திய மதுரை, திருமங்கலம் டவுன் பஸ்கள் மற்றும் மதுரை - செங்கோட்டை சாலையில் 2020 - 22 மே வரை சென்ற அரசு பேருந்துகளுக்கு மொத்தம் ரூ.29.5 கோடி கட்டணத்தை 7 நாட்களுக்குள் செலுத்த வேண்டும் என சுங்கச்சாவடி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஏற்கனவே போக்குவரத்து கழகங்கள் நஷ்டத்தில் இயங்கி வரும் நிலையில், அளவுக்கு அதிகமான சுங்கச்சாவடி கட்டணத்தை எப்படி செலுத்துவது என அதிகாரிகள் குழப்பத்தில் உள்ளனர்.