தமிழ்நாடு

பேருந்துக்குள் வடியும் மழை... குடைபிடித்தே பயணிக்கும் அவலம் - குமுறும் குமரி மக்கள்

webteam

குமரி மலையோர பகுதியில் இயங்கிவரும் அரசு பேருந்தில் மழைகாலங்களில் குடை பிடித்து பயணிக்கவேண்டிய அவலநிலை தொடர்ந்து வருகிறது. இன்று பெய்த மழையில் பயணிகள் குடை பிடித்து பயணித்தனர். குடை இல்லாத பயணிகள் இருக்கையில் அமர்ந்து பயணிக்க முடியாமல் நின்றே பயணித்தனர்.

குமரி மாவட்டம் கோதையார் மலையோர கிராமத்திற்கு குலசேகரம் பகுதியில் இருந்து இயங்கிவரும் தடம் எண் 89-J என்ற அரசு பேருந்தில் மழைகாலங்களில் பேருந்தின் உள் பகுதியில் பயணிகள் இருந்து பயணம் செய்யமுடியாத அளவுக்கு பேருந்தின் மேல் பகுதியில் இருந்து தண்ணீர் பல இடங்கள் வழியாக வடிந்து பயணிகள் மீது விழுந்து வருவதாக இந்த பேருந்தில் பயணிக்கும் மக்கள் தொடர் குற்றச்சாட்டை எழுப்பி வருகின்றனர். இதனால் தங்களது பகுதிக்கு தரமான பேருந்தை இயக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர்ந்து திருவட்டார் பணிமனை அதிகாரிக்கு மனுக்களை கொடுத்து வருகின்றனர்.

இன்று கோதையார் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் பெய்த மழையில் அதுவழியாக இயக்கிய அதே பேருந்தில் பயணிகள் இருக்கையில் அமர்ந்து பயணம் செய்ய முடியாமல் மழை நனைந்து கொண்டே நின்று பயணிக்க வேண்டிய நிலை இருந்தது. அதுவும் இருக்கையில் குடை பிடித்து பயணிக்க வேண்டிய அவலநிலைக்கும் தள்ளப்பட்ட காட்சிகள் இந்த பகுதி மக்களின் பேருந்து பயணம் எவ்வளவு கடினமாக உள்ளது என்பதற்கு ஒரு உதாரணமாக உள்ளது.