தமிழ்நாடு

4 மாதங்களாக சவுதியில் இருந்த தமிழரின் உடல் - பாரிவேந்தர் முயற்சியால்  தமிழகம் வருகை 

webteam

பெரம்பலூர் எம்.பி. பாரிவேந்தர் மேற்கொண்ட முயற்சியால், 4 மாதங்களாக சவுதியில் இருந்த தமிழரின் உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது. இதையடுத்து, பாரிவேந்தருக்கு உயிரிழந்தவரின் குடும்பத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தொகுதிக்கு உட்பட்ட பிலிமிசை கிராமத்தைச் சேர்ந்த கந்தசாமி என்பவர் சவுதியில் வேலைபார்த்து வந்ததாக கூறப்படுகிறது. 4 மாதங்களுக்கு முன், அவர் திடீரென தற்கொலை செய்து கொண்டதாக அவரது குடும்பத்தினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவரது உடலை சொந்த ஊருக்கு எப்படி எடுத்து வருவது எனத் தெரியாமல் குடும்பத்தினர் கண்ணீரில் ஆழ்ந்துள்ளனர். 

இந்நிலையில் கடந்த 4 ஆம் தேதி இது பற்றிய தகவலை அறிந்த பாரிவேந்தர், சவுதியில் உள்ள கந்தசாமியின் உடலை தமிழகம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கும்படி வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதினார். மேலும், வெளியுறவுத் துறை அமைச்சருக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தார். இதன் காரணமாக கந்தசாமியின் உடல் சவுதியில் இருந்து இன்று தமிழகம் கொண்டு வரப்பட்டது. இதையடுத்து, பாரிவேந்தருக்கு கந்தசாமியின் குடும்பத்தினர் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.