தமிழ்நாடு

’மகனின் இழப்பை ஏற்க முடியவில்லை’ - ஆன்லைன் ரம்மியால் இறந்த நபரின் பெற்றோர் கதறல்

webteam

ஆன்லைன் ரம்மியை தடைசெய்ய வேண்டும் என அதனால் உயிரிழந்த நபரின் தாயார் கண்ணீருடன் கோரிக்கை வைத்துள்ளார்.

சென்னை மணலி அண்ணா தெருவை சேர்ந்தவர்கள் பெருமாள்- ஜெயலட்சுமி தம்பதியர். இவர்களது 2-வது மகன் நாகராஜ்(42) கடந்த ஜூன் மாதம் 16-ஆம் தேதி இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பெயிண்டிங் கான்ட்ரக்டரான இவருக்கு வரலஷ்மி என்ற மனைவியும், பிரணவ்(8), பிரவீன்(6) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர். இவர் கடந்த 4 ஆண்டுகளாக ஆன்லைன் ரம்மி விளையாடி வந்ததாகவும், அதில் நண்பர்கள், உறவினர்கள் என ₹40 லட்சம் கடன் வாங்கியுள்ளார். ஆனால், அந்த பணத்தை ஆன்லைன் விளையாட்டில் இழந்துள்ளதாகத் தெரிகிறது.

இந்த நிலையில், ₹40 லட்சம் பணத்தை இழந்த நாகராஜ் தமது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்போது 6 மாதங்கள் கடந்துள்ள நிலையில் மகனின் இழப்பை ஏற்க முடியவில்லை எனவும், மகன் பயன்படுத்திய பெயின்ட் டப்பாக்களை பார்த்துக்கொண்டே காலத்தை கடத்தி வருவதாகவும், ஆன்லைன் ரம்மி விளையாட்டால் தமது மகனை பறிக்கொடுத்தது போன்று இன்னோர் உயிர் போகவேண்டாம் எனவும், அரசு ஆன்லைன் ரம்மியை தடைசெய்ய வேண்டும் எனவும் கண்ணீருடன் கோரிக்கை வைத்துள்ளனர்.